சென்னிமலை,ஜூன் 23: வெள்ளோடு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னிமலை அருகே வெள்ளோடு குட்டப்பாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி (70).விவசாயி. இவரது மனைவி சரோஜா (65). இவர்களுக்கு திருமணம் ஆன ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலையில் சரோஜா கோயில் விசேஷத்திற்கு செல்வதற்காக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் வேறு யாரும் இல்லை. அந்த சமயத்தில் அங்கு ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த சுமார் 35 மதிக்கத்தக்க நபர் ஒருவர் சரோஜாவிடம் அரிசி வேண்டும் என கேட்டுள்ளார்.
வீட்டிற்குள் சென்று சுமார் 2 கிலோ அரிசியை எடுத்து வந்து அந்த நபரிடம் சரோஜா கொடுத்துள்ளார். அப்போது திடீரென சரோஜா கழுத்தில் இருந்த சுமார் மூன்றே கால் பவுன் தங்க செயினை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரோஜா திருடன், திருடன் என சத்தம் போட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து பைக்கில் எடுத்து கொண்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின் பேரில் வெள்ளோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று ஈங்கூர், பெருந்துறை ஆர்எஸ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
