திருப்பூர்,ஜூன்23: கத்தாங்கன்னி பகுதியில் அரசு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கேயம் ரெட்டிபாளையம் கத்தாங்கன்னி பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: எங்களது பாலசமுத்திரம் புதுர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 900 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். எங்களது கிராமத்திற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால், பள்ளி செல்வதற்கு கடும் சிரமங்களை சந்தித்து வருகிறோம்.உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், எங்கள் வழித்தடத்தில் காலையில் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அரசு பஸ் வசதி செய்து தர வேண்டும். எனவே, இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர். பெருந்தொழுவு கிராமம் பி.ஆண்டிபாளையம் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 35 அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள 25 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், கம்பிவேலியும் அமைத்துள்ளனர். இது குறித்து நாங்கள் கேட்ட போது எங்களை மிரட்டுகிறார்கள். எனவே, நடைபாதை வழிபாதையை ஆக்கிரமித்தும், அரசு நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
நல்லூர் நுகர்வோர் நல மன்றத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் பனியன் நிறுவனத்தில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் எந்த மாநிலம் மற்றும் எந்த மாவட்டங்களை சோ்ந்தவர்கள் என தெரியவில்லை. இதனால், பல்வேறு குற்றச்சம்பவங்ள் பல இங்களில் நடந்து வருகிறது. எனவே, இதனை தடுக்கவும், முறைப்படுத்தவும் வடமாநில தொழிலாளர்களை உரிய ஆவணங்களை பெற்று வேலைக்கு சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
