×

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

 

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், அதில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும், சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் இந்தி கட்டாயம் என மும்மொழியை அமல்படுத்துதலை கண்டித்தும், நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்தும் தமிழ் மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சென்னை மாநிலக் கல்லூரி தமிழ் மாணவர் மன்ற தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய பாஜ அரசுக்கும், தமிழக தவெக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து மாநிலக் கல்லூரி தமிழ் மாணவர் மன்ற தலைவர் ஈஸ்வரமூர்த்தி அளித்த பேட்டி: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டு மாணவர்களும் போராடி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் ஒலித்து வருகிறது. ஆனால் ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டு மாணவர்களின் கனவுகளை வஞ்சிக்கக்கூடிய வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வு தொடர்ந்து உயிர்க்கொல்லி தேர்வாக உள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யும் வரை மாணவர்களின் போராட்டம் தொடரும்.

மேலும், முகமூடி அணிந்து ஒன்றிய பாஜ அரசு மும்மொழி கொள்கைகளை திணிக்க பார்க்கிறது. மாணவர்களின் கனவை சிதைக்கும் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் பெயரை முதல்வர் மாற்றியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் முதல்வன் திட்டம் மாணவர்களுக்கு பெரிய அளவில் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. எண்ணற்ற மாணவர்களை நான் முதல்வன் திட்டம் உருவாக்கியுள்ளது. நான் முதல்வன் திட்ட பெயரை மாற்றுவதே முதல்வர் விஜய்யின் அச்சத்தின் வெளிப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai State College ,Naan Multhavan ,Thaweka government ,Chennai ,NEET ,State College ,Kamaraj Salai, Chennai ,CBSE ,Naan Multhavan… ,
× RELATED தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை...