×

தவெக அரசின் அலட்சியத்தால் 48 அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேராத அதிர்ச்சி: ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதாக கல்வியாளர்கள் தாக்கு

 

ஊட்டி: தவெக அரசின் அலட்சியத்தால் நீலகிரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. 48 அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பில் ஒரு மாணவர் கூட புதிதாக சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் பழங்குடியின மக்கள், தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கல்வி பெற வசதியாக கிராமப்புறங்களில் தொடக்க பள்ளிகள் திறக்கப்பட்டன. வனத்தை ஒட்டியும், போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளிலும் கூட அரசு தொடக்க பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.

கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும், கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கண்காணிக்க எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காததால் கடந்த கல்வியாண்டை காட்டிலும் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை கடுமையாக குறைந்துள்ளது.

நீலகிாி மாவட்டம் முழுவதும் மொத்தம் 501 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் 390 பள்ளிகள் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் ஆகும். கடந்த 2025-26ம் கல்வியாண்டில் 1ம் வகுப்பில் 2183 பேரும், 5ம் வகுப்பு முடித்து 6ம் வகுப்பில் 3009 பேரும் சேர்ந்தனர். 10ம் வகுப்பு முடித்து 11ம் வகுப்பில் 3476 பேரும் சேர்ந்தனர். ஒட்டுமொத்தமாக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 35 ஆயிரத்து 446 மாணவ, மாணவிகள் பயின்றனர். 2026-27 நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பில் 1689 பேரும், 5ம் வகுப்பில் இருந்து 6ம் வகுப்பிற்கு 2749 பேரும் சேர்ந்துள்ளனர். 10ம் வகுப்பில் இருந்து பிளஸ் 1க்கு 2924 பேரும் சேர்ந்துள்ளனர்.

மாணவர் சேர்க்கை குறைந்ததால் கடந்த கல்வியாண்டை காட்டிலும் நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 437 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக 48 அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பில் ஒரு மாணவர் கூட புதிதாக சேர்க்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவெக அரசு பள்ளிகளில் ரீல்ஸ் பதிவிடுவதில் செலுத்தும் கவனத்தை மாணவர் சேர்க்கையிலும் செலுத்தி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Teva government ,Nilgiris ,Nilgiris… ,
× RELATED தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை...