×

அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி தவெக பொறுப்பாளர் ரூ.1.5 கோடி மோசடி: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

 

ஊட்டி: நீலகிரி மாவட்ட தவெக பொறுப்பாளர் ரமேஷ் என்கிற சதாசிவம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். நீலகிரி கலெக்டரிடம் பொதுமக்கள் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஊட்டி நகரில் கமர்சியல் சாலையில் கடந்த 2023ம் ஆண்டு எஸ்எம்சி கூட்டுறவு சொசைட்டி என்ற ஒரு நிறுவனம் துவக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில், அதிக வட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஊட்டி கிளையின் தலைவரான ரமேஷ் என்கிற சதாசிவத்தை (தவெக மாவட்ட பொறுப்பாளர்) நம்பி நாங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த ரூ.50 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரையில் சுமார் ரூ.1.5 கோடி வரை டெபாசிட் செய்தோம்.

ஆனால், அந்த நிறுவனம் எங்களுக்கு முறையாக வட்டி வழங்கவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது, அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரமேஷ் என்கிற சதாசிவம் கையாடல் செய்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக, அவரை திண்டுக்கல் போலீசார் கைது செய்ததாகவும், தற்போது அவர் ஜாமீனில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நாங்கள் சம்பந்தப்பட்ட ரமேஷிடம் கேட்டால், அவர் எங்களை தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார். எங்களிடம் டெபாசிட் செய்ததற்கும், மாதந்தோறும் பணம் செலுத்தியதற்கான ஆவணங்கள் உள்ளன.

எனவே, சம்பந்தப்பட்ட ரமேஷ் என்கிற சதாசிவம் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்ட தவெக பொறுப்பாளர் ரமேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியில் வந்த வண்ணம் உள்ளது.

Tags : Ooty ,Nilgiris ,Dhavek ,Ramesh ,Sathasivam ,Nilgiris Collector ,
× RELATED தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை...