×

சென்னிமலை அருகே வறட்சியான குளங்களுக்கு நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவேறுமா?

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

சென்னிமலை : சென்னிமலை அருகே வறட்சியாக உள்ள குளங்களை நிரப்ப நீர் செறிவூட்டும் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னிமலை அருகே தெற்கு வனப்பகுதியில் எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் ஆண்டிகாட்டுகுளம், சில்லாங்காட்டுவலசு குளம் மற்றும் வெப்பிலி குளங்கள் உள்ளது.

மலை அடிவாரத்தில் உள்ள இந்த குளங்களுக்கு வனப்பகுதியில் அதிக அளவில் மழை பெய்தால் மட்டுமே ஓரளவு தண்ணீர் வரத்து இருக்கும். மற்ற காலங்களில் தண்ணீர் வற்றி வறட்சியாக காணப்படும். இதனால், இங்கு குளங்கள் இருந்தும் அதில் தண்ணீர் இல்லாததால் தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் போதுமான தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இருந்து முதலைமடை ஓடை வழியாக வெளியேறும் உபரி நீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலைபாளையம் பகுதியில் ரூ.12.65 கோடி மதிப்பில் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது அந்த பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இந்த, தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வெளியேறினால் நொய்யல் ஆற்றில் வீணாக கலந்து செல்லும்.

அதனால், இந்த தடுப்பணையில் இருந்து பைப்லைன் அமைத்து சென்னிமலை வனப்பகுதியில் உள்ள வறண்டு கிடக்கும் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னிமலை நீர் மேம்பாட்டு குழு நிர்வாகிகள் கூறுகையில், ‘‘நீர் செறிவூட்டும் திட்டம் என்பது சென்னிமலை தெற்கு வனப்பகுதியில் உள்ள குளங்களில் குடிநீர் ஆதாரத்தை பெருக்குதல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

மேலும், இந்த திட்டத்தால் பருவ மழை பொய்த்தால் இந்த குளத்தில் தண்ணீர் நிரப்பும்போது கோடை காலத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மேலும், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயரும் என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

எனவே, இந்த நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றக்கோரி நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். இதற்காக எக்கட்டாம்பாளையம் ஊராட்சி மன்றம் மற்றும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மூலம் சென்னிமலை பிடிஓவுக்கு மனு அனுப்பி, அந்த மனுவின் மீது ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் நீர் செறிவூட்டுவதற்கு உரிய சாத்திய கூறுகள் உள்ளது என்று பிடிஓ மூலம் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், இந்த திட்டத்தை நிறைவேற்ற எவ்வளவு தொகை செலவு ஆகும் என இன்ஜினியர் மூலம் மதிப்பீட்டு அறிக்கை அளித்தும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

அண்ணாமலைபாளையம் பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் முயற்சியால் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று தற்போது நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. அதனால், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இந்த தடுப்பணையில் இருந்து வறண்டு கிடக்கும் குளங்களுக்கு நீர் செறிவூட்டும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Chennimalai ,Tamil Nadu government ,Ayyampalayam Andikattukulam ,Ekkattampalayam panchayat ,
× RELATED அமோனியா வாயு கசிவு விவகாரத்தை எழுப்பி...