×

மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்கும் யோசனைக்கு அன்புமணி எதிர்ப்பு

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான தேவையையே நாம் ஏற்காதபோது, அந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைத்து மத்தியஸ்தம் செய்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவ்வாறு ஏற்க முடியும்? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. காவேரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான தேவையையே தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாத நிலையில், அந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைத்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட மேகதாது அணை சிக்கல் குறித்த தனித் தீர்மானத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சேர்க்கப்பட்டது தவறு என்றும், அதை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தேன். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அந்த கோரிக்கையை தமிழக அரசு மறுத்துவிட்டு புதிய நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்று கூறி தமிழக சட்டப்பேரவையில் இனியும் இது பற்றி விவாதிக்க கூடாது என்றும் கூறியிருக்கிறது.

மேகதாது அணை சிக்கல் தொடர்பாக மக்களவையிலும், கடிதங்களின் மூலமாகவும் தொடர்ந்து நான் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் 09.06.2015-ஆம் நாள் எனக்கு கடிதம் எழுதிய அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, மேகதாது அணைக்கு அனுமதி கோரி எதிர்காலத்தில் விண்ணப்பிக்கப்பட்டாலும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அதை பரிசீலிக்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தார்.

மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலைப்பாடும் இது தான். விவசாயிகளின் நலன் காப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி புதிய நடுவர் மன்றம் அமைப்பதை ஒருபோதும் ஏற்காது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் தெளிவான நிலைப்பாட்டை வகுப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

 

 

Tags : Anbumani ,Mekedatu ,Chennai ,Cauvery ,
× RELATED மேகதாது அணை தீர்மானத்தில் திருத்தம்...