×

அமோனியா நச்சு வாயு கசிவு; அப்பாவி தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு தனியார் ஆலை மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம்: எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

சென்னை: திருவள்ளூர் அருகே இறால் தொழிற்சாலையில் அமோனியா நச்சு வாயு கசிவால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு தனியார் ஆலை மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், மஞ்சகரணையில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா நச்சு வாயு கசிவு காரணமாக, 7 அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவர்களுக்குத் தேவையான உயர்தர சிகிச்சையையும் உரிய நிவாரணத்தையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

​இந்த கோர விபத்திற்கும், அப்பாவி தொழிலாளர்களின் உயிரிழப்பிற்கும் தனியார் நிறுவனத்தின் அப்பட்டமான அலட்சியப் போக்கே முக்கியக் காரணமாகும். தொழிற்சாலைகளில் மிக முக்கியமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடிப்படை பாதுகாப்பு விதிகள் எதுவும் இங்கு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தொழிலாளர்களின் உயிருடன் விளையாடிய இந்த தனியார் தொழிற்சாலை மீது அரசு உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

​அப்பாவிகளின் உயிர்கள் பறிபோகக் காரணமான இந்த விபத்திற்கு தொழிற்சாலை நிர்வாகம் மட்டுமன்றி, தொழிலாளர் நலன் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் முக்கியக் காரணமாவார்கள். இத்தகைய தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டிய அதிகாரிகள் தங்களின் கடமையில் இருந்து தவறியுள்ளனர். எனவே, இந்த தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் பாய வேண்டும்.

​தமிழக அரசு இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் உடனடியாக இழப்பீடு வழங்கிட வேண்டும். மேலும், இதுபோன்ற விபத்துகள் இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் எங்கும் நிகழாமல் தடுக்க, தமிழகம் முழுவதும் உள்ள பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலும், நச்சு வாயுக்களைப் பயன்படுத்தும் இதர தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் நலத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக அவசர காலப் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : STBI party ,Chennai ,Tiruvallur ,STBI party… ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர்...