×

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் முன்பே ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகத்திடம் கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரிப்பு

புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியில் நிச்சயமற்ற சூழலில், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா சாதனை அளவை எட்டியிருக்கிறது. அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும், முக்கிய கச்சா எண்ணெய் விநியோக நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்த சூழலுக்கு மத்தியில், சமீபத்தில் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் முன்பாகவே ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஜூன் மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய், கடந்த மே மாதத்தில் ஒருநாளுக்கு 19.1 லட்சம் பீப்பாய்களாக இருந்த நிலையில், கடந்த 19ம் தேதி வரையிலான ஜூன் மாதத்தில் ஒருநாளுக்கு சராசரியாக 26.6 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கடல்சார் மற்றும் சரக்குகள் ஆய்வு நிறுவனமான கெப்லரின் தரவுகள் காட்டுகின்றன.

இது, இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா தொடர்ந்து நீடிப்பதை காட்டுகிறது.
இதே காலகட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு ஒருநாளுக்கு 6,36,000 பீப்பாய்களாக இருந்தது. இது மே மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சாதனை அளவான 6,44,000 பீப்பாய்கள் என்பதை விட சற்றே குறைவாகும்.

சவுதி அரேபியாவிடம் இருந்து சராசரியாக ஒருநாளுக்கு 3,84,000 பீப்பாய்களும், வெனிசுலாவிடமிருந்து 2,09,000 பீப்பாய்களும் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் வெனிலா இந்தியாவின் 4வது பெரிய கச்சா எண்ணெய் விநியோக நாடாக உருவெடுத்துள்ளது. அதே சமயம் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதி மே மாதத்தில் 2,52,000 பீப்பாய் ஆக இருந்த நிலையில், தற்போது 91,000 பீப்பாய்களாக குறைந்திருப்பதாக கெப்லர் தரவுகள் காட்டுகின்றன.

Tags : Russia ,UAE ,Strait of Hormuz ,New Delhi ,India ,US ,Iran ,Hormuz… ,
× RELATED உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 போர்...