சென்னை: அமோனியா வாயு கசிவால் 2 பேர் உயிழப்பு சம்பவத்திற்கு ஆளுநர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்யவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக ஆளுநர் அர்லேகர்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கண்ணிகைப்பேர் கிராமத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த துயரமான அம்மோனியா வாயு கசிவுச் சம்பவத்தால், பல தொழிலாளர்கள் காயமடைந்ததோடு, பல உயிர்களும் பலியாகியுள்ளன. இந்தத் துரதிர்ஷ்டவசமான துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் தைரியமும் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன். சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டு வரவும் நான் பிரார்த்திக்கிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன். இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்துவதோடு, தேவை ஏற்படின், புதிய நெறிமுறையை வெளியிட அரசு முன்வர வேண்டும். தொழிலாளர் நலனிலும்-பாதுகாப்பிலும், எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
செல்வபெருந்தகை(தமிழக காங்கிரஸ் தலைவர்): தமிழகத்தில் உள்ள அனைத்து இறால் பதப்படுத்தும் நிறுவனங்கள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நல வாரியமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து உடனடியாகப் பாதுகாப்புத் தணிக்கை நடத்த வேண்டும்.
நயினார் நாகேந்திரன்(தமிழக பாஜ தலைவர்): உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, சிகிச்சை பெற்று வரும் அத்தனை பேரும் முழு உடல் நலத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தொழிலாளர்களின் உயிர் காக்கும் வகையில் தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா, அங்கே எதிர்பாரா விபத்துக்களைக் கையாளும் தொழில்நுட்பங்கள் உள்ளனவா உள்ளிட்டவைகளை உடனடியாக ஆய்வு செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென முதல்வர் விஜயை கேட்டுக் கொள்கிறேன்.
பிரேமலதா(தேமுதிக பொதுச்செயலாளர்): மனித உயிர்களை துச்சமாக நினைத்து ஆலைகளை நடத்தி இது போன்ற செயல்கள் நடைபெறுவது ஏற்று கொள்ளமுடியாது இது கடுமையான கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை மற்றும் உரிய நிவாரணம் வழங்குவதுடன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்தவர்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாததன் விளைவாக அப்பாவி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு குழு அமைத்து உண்மையான காரணத்தை கண்டறிந்து சம்பவத்திற்கு காரணமான ஆலை உரிமையாளர்களிடம் உரிய விசாரணை நடத்தி, தண்டனை வழங்க வேண்டும்.
மு.வீரபாண்டியன் (இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்துகிறது. அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்தக் கோர விபத்துக் குறித்து நீதி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும்.
தமிழ்நாட்டில் இயங்கும் ஆலைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். இவ்விபத்தில் உயிரிழந்த அனைத்துத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும். சிகிச்சை பெற்றுவருவோருக்கு தரமான சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
* எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): பெரியபாளையம் பகுதியில் உள்ள தனியார் இறால் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வாயு கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களைக் காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை இந்த அரசு தொடர் ஆய்வுகள் மூலம் உறுதிசெய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
