திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அடுத்த திருநகரில் அமைச்சரும், தொகுதி எம்எல்ஏவுமான நிர்மல்குமாரின் புதிய சட்டமன்ற அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. அப்போது அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டி: நீட் தேர்வு மிகப்பெரிய குளறுபடி. நீட்டே தேவையில்லை. மக்களுக்கு தேவையில்லாத அலைக்கழிப்பு. ஒரு தேர்வைக்கூட ஒன்றிய அரசால் ஒழுங்காக நடத்த முடியவில்லை. வினாத்தாளை கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. மையங்களும் குறைவுதான்.
வரும் மாணவர்களிடம் வளையலை கழட்டு, தோடு கழட்டு, துப்பட்டா கழட்டு என்கிறார்கள். பாஜ கட்சி இருக்கும் மாநிலங்களில் கடந்த 2, 3 வருடங்களாக இந்தத் தவறு நடக்கிறது. தகுதியான மாணவர்கள் வருவதற்குத்தானே இந்த தேர்வு வைக்கிறார்கள்? அந்த காரணமே நிறைவேறலை. இரண்டாவது முறையாக தேர்வு எழுதுகிறார்கள். கடந்த வாரம் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
நீட் குளறுபடிகளுக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும். தனியார் கொள்ளையடிப்பதற்கு நீட் கோச்சிங் சென்டர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ரூ.800 கோடி வரை செல்ல வழி செய்து கொடுத்துள்ளனர். பெற்றோருக்கு 2, 3 லட்ச ரூபாய் கூடுதல் செலவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மேகதாது அணை விவகாரத்தை சட்டரீதியாகத்தான் முன்னெடுப்போம்.
இங்கிருக்கும் அனைத்து கட்சிகளும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதிமுகவில் பல ஆண்டுகள் பயணித்தவர்கள், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு எடப்பாடி பழனிசாமியோடு இருக்க மாட்டோம் என்று வெளியே வருகிறார்கள். முதல்வர் விஜய்தான் ஒரே பவர் சென்டர். அவரை தவிர்த்து எந்த சென்டரும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.
* ‘முதல்வருக்கான தேர்வுன்னு நினைக்குறாங்க அதான் நான் முதல்வன் பெயரை மாத்திட்டோம்’
அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், ‘‘நான் முதல்வன் திட்டம் பெயர் மாற்றத்தில் எந்த ஸ்டிக்கரும் ஒட்டவில்லை. அது திறன் மேம்பாட்டுக்கான திட்டம். திட்டத்தோட பெயர் புரியும்படியாக இருக்க வேண்டும். நான் முதல்வன் என்றால் நிறையப் பேர் குழப்பமாயிடுறாங்க. முதல்வர் ஆகுறதுக்கு ஏதோ நடக்குது போலன்னு நினைச்சுக்கிறாங்க. நான் முதல்வன் திட்டம் என்னன்னு யாரிடமாவது கேட்டுப்பாருங்க, யாருக்கும் தெரியாது. திட்டம் தொடர்கிறது. பெயர் குழப்பமாக இருப்பதால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
