உலகம் முழுவதும் ஏராளமானோர் பங்கேற்பு; சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்: கொல்கத்தாவில் பிரதமர் மோடி மக்களோடு யோகாசனம் செய்தார்

கொல்கத்தா: சர்வதேச யோகா தின விழா நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல நாடுகளிலும் மக்கள் யோகாசனம் செய்தனர். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களோடு யோகாசனம் செய்தார். இந்தியாவின் பாரம்பரிய யோகா கலையை உலகம் முழுவதும் அங்கீகரிக்கும் வகையில், பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா அறிவித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 12வது சர்வதேச யோகா தினம் நேற்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டிற்கான யோகா தினத்தின் கருப்பொருள் ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்பதாகும். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ரெட் ரோட்டில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பொதுமக்களுடன் இணைந்து யோகாசனங்களை செய்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘‘வேலை, உணவு, உறக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய சமச்சீரான முறையில் வாழ்வதற்கான கலையை யோகா நமக்கு கற்றுத் தருகிறது. யோகா உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. மாறாக, மனநலத்தின் மூலம் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதையும் அது நமக்கு உணர்த்துகிறது.

யோகாவை ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது நிகழ்வோடு நிறுத்திவிடாமல், நமது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகவும், நமது குடும்பங்கள் மற்றும் வருங்கால சந்ததியினரின் வாழ்வின் ஒரு பகுதியாகவும் மாற்றிக்கொள்வோம் என்று உறுதியேற்போம். உலக அமைதிக்கு வழிவகுக்கும் யோகாவை வயது வித்தியாசமின்றி அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பல்வேறு நகரங்களில் நடந்த யோகா விழாவில் பங்கேற்று யோகாசனம் செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘‘பல சவால்களுக்கு மத்தியில் மனித குலத்தை வழிநடத்தும் இந்தியாவின் உலகளாவிய பரிசு யோகா’’ என புகழ்ந்தார்.

இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, பின்லாந்து, இங்கிலாந்து, மலேசியா, சவுதி அரேபியா, ஓமன், கஜகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் இந்திய தூதரகங்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்த யோகா தின விழாவில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர்கள் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.

* லேவில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி பங்கேற்பு
லடாக் யூனியன் பிரதேசத்தில் மிக உயர மலைப்பகுதியான லேவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இதில், லடாக் துணை நிலை ஆளுநர் சக்சேனா, லடாக் எம்பி ஹனீபா ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மன அமைதியை வளர்ப்பதில் யோகா முக்கிய பங்கு வகிப்பதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறினார்.

Related Stories: