கொல்கத்தா: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 அதிநவீன போர்க்கப்பல்களை கொல்கத்தாவில் நடந்த விழாவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒன்றிய அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரே ஆகிய 3 அதிநவீன போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக நேற்று சேர்க்கப்பட்டன. கொல்கத்தா சியாமபிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடந்த விழாவில் 3 போர் கப்பல்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது: பாதுகாப்புத் துறையில் இந்தியா ஒரு வாங்கும் நாடாக மட்டுமே இருக்க விரும்பவில்லை நாட்டின் ஆயுதப் படைகள் உலகிற்கான ஒரு சந்தையாக மட்டும் இருக்க முடியாது. நமது திறன்களுக்கான அங்கீகாரம் என்பது நாம் உலகிற்கான சந்தையாக மாறுவதில் இல்லை, மாறாக நமது தன்னம்பிக்கையில்தான் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலை சேவையில் ஈடுபடுத்தியதன் மூலம் இந்தியா தனது கடல்சார் திறன்களை நிரூபித்தது.
கடந்த சில ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 45 பெரிய கடற்படைத் தளங்கள் கட்டுமானத்தில் உள்ளன. இவை வெறும் எண்கள் மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்துறைத் திறனுக்கான சான்று மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான அறிகுறியாகும்.
பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மூன்று கடற்படை தளங்களின் கட்டுமானப் பணிகளில் இந்திய நிறுவனங்கள், பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
எனது நாட்டின் வலிமையின் அடையாளம் உலகச் சந்தையாக மாறுவதில் இல்லை, மாறாக நமது சுயசார்பில் உள்ளது. இந்தியா ஒரு உற்பத்தியாளராக மாற விரும்புகிறது; நாம் உற்பத்தியாளராக மாறும் நாளில், நாமே முடிவெடுப்பவர்களாகவும் இருப்போம். இந்தத் திசையில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. கப்பல் போக்குவரத்துத் துறைக்கான ரூ.70,000 கோடி நிதித் தொகுப்பு என்பது வெறும் பொருளாதார முடிவு மட்டுமல்ல, அது இந்தியாவின் கடல்சார் எதிர்காலம் மற்றும் தொழில்துறை விரிவாக்கத்திற்கான முதலீடு.
கடல்சார் ஆற்றல் இல்லாமல் எந்த நாடும் வல்லரசாக ஆக முடியாது. வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவை கடல்களுடன் பிணைந்துள்ளன. ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் ராணுவ செல்வாக்கிற்கு வலுவான கடல்சார் திறன்களே தீர்மானிக்கும் காரணியாகும். இந்தியா இதை நன்கு புரிந்துகொண்டு அதற்காகத் தயாராகி வருகிறது.
* ஐஎன்எஸ் துனகிரி: எதிரிகளின் ரேடார்களுக்கு சிக்காமல் செல்லும் ஸ்டெல்த் (Stealth) தொழில்நுட்பம் கொண்ட 7 போர்க்கப்பல் கட்டும் திட்டத்தின் 5-ஆவது கப்பலாகும். ஒரே நேரத்தில் வான், தரை மற்றும் நீருக்கடியில் உள்ள அச்சுறுத்தல்களை முறியடிக்கும் திறன் கொண்டது.
* ஐஎன்எஸ் சன்ஷோதக்: இது கடலோர மற்றும் ஆழ்கடல் நீரியல் ஆய்வுகள், கடலியல் தரவுகளைச் சேகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மாபெரும் ஆய்வுக் கப்பலாகும்.
* ஐஎன்எஸ் அக்ரே: இது கடலோரத்தில் நீருக்கடியில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து தாக்கும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலாகும்.
