வாணியம்பாடி: வாணியம்பாடியில் நேற்று நடந்த மாட்டுச்சந்தையில் ரூ.12 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. இவற்றில் சினைமாடுகள் ரூ.80 ஆயிரம் வரையில் விலைபோனது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலையொட்டிய பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று மாட்டுச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று நடந்த சந்தையையொட்டி ஜமுனாமரத்தூர், காவலூர், ஆலங்காயம், நிம்மியம்பட்டு, வெள்ளக்குட்டை, ஆம்பூர், மாதனூர், நாட்றம்பள்ளி,
பச்சூர், ஆந்திர மாநிலம் குப்பம், மல்லானூர், விகோட்டா, பலமனேர் போன்ற பகுதிகளிலிருந்து வாகனங்களில் விற்பனைக்காக மாடுகள் கொண்டுவரப்பட்டது. காலை முதல் பிற்பகல் வரை நடந்த இந்த சந்தையில் சுமார் ரூ.12லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் நேற்று நடைபெற்ற சந்தையில் கறவை மாடுகள் ரூ.70 ஆயிரம் வரையிலும், சினை மாடுகள் ரூ.80 ஆயிரம் வரையிலும், காளை மாடுகள் ஜோடி ரூ.90 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
