துபாய்: லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், பதில் நடவடிக்கையாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மீண்டும் மூடியது. இதனால், கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. பதிலுக்கு, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான், கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உலக நாடுகள் பொருளாதார சிக்கலை சந்தித்தன. இதற்கிடையே, பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த 18ம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதால், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதித்தது. அதே சமயம் அமெரிக்க கடற்படையும் தனது முற்றுகையை கைவிட்டது. இதன் காரணமாக, சுமார் 3 மாதத்திற்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் சீரானது. இது உலக நாடுகளுக்கு நிம்மதி அளித்தது. அதே சமயம், அமெரிக்காவும் ஈரானும் சுவிட்சர்லாந்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை தொடங்க இருந்தன.
இந்நிலையில், அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் போர் தொடங்கிய உடனேயே ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஈரான் போர் ஓய்ந்தாலும், லெபனான் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்தவில்லை. நேற்று முன்தினம் லெபனானில் நடந்த கடுமையான மோதலில் 47 பேரும், 4 இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்குக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுவிற்கும் இடையே சண்டையை நிறுத்த மத்தியஸ்த முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
ஹிஸ்புல்லா ஒப்பந்தத்தை மதித்து போர் நிறுத்தத்தை மேற்கொண்டால் இஸ்ரேலும் சம்மதிப்பதாக இஸ்ரேலிய தூதர் யெச்சியல் லெய்டர் வாஷிங்டனில் தெரிவித்தார். இதே போல ஹிஸ்புல்லாவும் கூறியது. எனவே அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தம் ஏற்படாத நிலையில் நேற்று முன்தினம் இரவு தெற்கு லெபனானில் உள்ள இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேற்று லெபனானின் தெற்கில் உள்ள நபாதியே நகரத்தையும் சுற்றுப்புற கிராமங்களையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கியதில் 2 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக நேற்று அறிவித்தது. ஈரானின் மத்திய ராணுவ தலைமையகம் அரசு தொலைக்காட்சியில் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள், அமெரிக்கா உடனான ஈரானின் ஒப்பந்தத்தை மீறும் செயல். இதற்கு எதிர்வினையாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் திட்டமிட்டு செயல்படுத்தப்படும்’’ என கூறப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் மீண்டும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விநியோகமும் முடங்கும் நிலை உருவாகி உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை 3 இந்திய கப்பல்கள் கடந்தன
ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக ஈரான் நேற்று அறிவித்த நிலையில், இந்திய கொடியுடன் கூடிய 3 எண்ணெய் கப்பல்கள், 94 இந்திய குழுவினருடன் 8.6 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான சரக்குகளை ஏற்றிக் கொண்டு நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து இந்தியாவை நோக்கி பயணித்து வருவதாக ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார். தேஷ் வைபவ், தேஷ் விபோர், சன்மார் ஹெரால்ட் ஆகிய 3 எண்ணெய் கப்பல்கள் வரும் 24 முதல் ஜூலை 1ம் தேதிக்குள் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழிப்புடன் இருப்பதாக அமெரிக்க ராணுவம் தகவல்
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக ஈரான் அறிவித்தாலும், அப்பகுதியில் நேற்று கப்பல்போக்குவரத்து வழக்கமாக நடந்ததாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 55 வணிகக் கப்பல்கள், 17 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெய் மற்றும் பிற சரக்குகளை ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து கொண்டு சென்றதாக கூறி உள்ளனர். இந்த நீர்வழிப்பாதையின் நிலை குறித்த முரண்பட்ட கருத்துகள் நிலவும் சூழலில், ஈரானுடனான ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் கடைபிடிக்கப்படுவதையும், மதிக்கப்படுவதையும், முழுமையாகச் செயல்படுத்தப்படுவதையும் உறுதிசெய்ய அமெரிக்கப் படைகள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியது.
இன்று பேச்சுவார்த்தை?
அமெரிக்கா-ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் நேற்று முன்தினம் நடக்க இருந்த பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளதாக மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் குழு சுவிட்சர்லாந்திற்கு புறப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
