டெல்லி: கடந்த நீட் தேர்வின் போது ஒரு கும்பல் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வினாத்தாள்களை கசியவிட்டது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு வரும் 21ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே நடந்தது போன்று மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்வதை தடுக்க, வரும் 22ம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு ஒன்றிய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மேலும் நீட் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து பணியாளர்களும் வரும் 21ம் தேதி வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் செல்போன், லேப்டாப் மற்றும் தனிப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அனுமதி இல்லை.
நீட் வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக, முதல் முறையாக இந்திய விமானப் படை (ஐஏஎப்) ஈடுபடுத்தப்பட உள்ளது. ஒன்றிய அரசின் உத்தரவின்படி, வினாத்தாள்கள் அதன் உற்பத்தி மையங்களில் இருந்து புறப்பட்டது முதல் பயணம் முழுவதும் மாநில போலீசாரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். மேலும், ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய முதன்மை மையங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும் 551 நகரங்களின் மையங்கள் வரையிலான ஒட்டுமொத்த பயணத்திலும் சிஐஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் தீவிரமாக பாதுகாப்பார்கள். மேலும், தேர்வு செயல்முறை முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பை உறுதி செய்ய, என்டிஏ பல அடுக்கு பாதுகாப்பு உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
தேர்வு மையங்கள் முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். வினாத்தாள் கசிந்துவிட்டதாக கூறப்படும் வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று என்டிஏ மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளதுடன், தேர்வுக்கு முன்பாக யாரும் வினாத்தாளை பெற முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது. தவறான தகவல்களை பரப்புபவர்கள் அல்லது மோசடி செய்ய முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
