திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை: ஜூலை 1 முதல் அமலாகிறது

 

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பின்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளே பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 14.11.2022 முதல் திருக்கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேற்படி நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதற்காக வருகிற ஜூலை 1ம்தேதி முதல் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையானது, மிகத்தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை, ரூ.100 விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வரிசை போன்ற அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே பக்தர்கள் திருக்கோயிலுக்கு வரும்போது தங்கள் செல்போன்களை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது தங்களது வாகனங்களிலோ, பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே.

திருக்கோயில் நிர்வாகம் சார்பில் செல்போன் வைப்பிடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பக்தர்கள் தங்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு செல்ல வேண்டும். பரிசோதனையின் போது பக்தர்களிடம் செல்போன்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பக்தர்கள் அவசர பயன்பாட்டிற்காக, மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் வசதி, பொது அறிவிக்கை அமைப்பு, ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. எனவே உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோயிலுக்குள் செல்போன் இன்றி தரிசனம் செய்வதை முழுமையாக நடைமுறைப்படுத்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: