காரியாபட்டி, ஜூன் 18: காரியாபட்டியில் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர் சரகத்திற்கு உட்பட்ட காரியாபட்டி பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் கார்த்திகை ராஜன், சைல்ட்லைன் களப்பணியாளர் முத்துமாரி மற்றும் காரியாபட்டி காவல் நிலைய போலீசார் இணைந்து காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பஜார் பகுதியில் உள்ள பூக்கடையில் 14 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள் பணிபுரிந்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, காரியாபட்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மீட்கப்பட்ட மூன்று சிறுவர்களும் அவர்களது பாதுகாப்பு மற்றும் நலன் கருதி விருதுநகர் குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
