கூடலூர், ஜூன் 19: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆய்வாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, கூடலூர் மைசூர் சாலை மாக்கு மூலா பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்தனர்.
அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டு உள்ளே இருந்த ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் புரோக்கர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து மாலை வரை உள்ளே சோதனை நடைபெற்றது.
இதில், கணக்கில் வராத 1 லட்சத்து 33 ஆயிரத்து 590 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை காரணமாக மக்கள் கூட்டம் பரபரப்பாக காணப்படும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
