ஒட்டன்சத்திரம், ஜூன் 18: ஒட்டன்சத்திரம் அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 7 பவுன் தங்க செயின் பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தயம் அருகேயுள்ள கூத்தம்பூண்டி ஊராட்சி மோதுபட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சாமியாத்தாள் (70). இருவரும் ஊரின் வெளியே உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ராமசாமி வெளியில் சென்றுள்ளார். அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், மின் இணைப்பை துண்டித்து விட்டு சாமியாத்தாளின் வாயில் துணியால் அமுக்கி, அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கள்ளிமந்தயம் போலீசார், சாமியாத்தாளிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
