பழநி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம், தங்கரதம் கட்டண உயர்வை கைவிட வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை மனு

 

திண்டுக்கல், ஜூன் 16: பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் மற்றும் தங்கரதம் கட்டணங்களை உயர்த்தும் முடிவை, கோயில் நிர்வாகம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கலெக்டரிடம் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பஞ்சாமிர்தம் மற்றும் தங்கரதம் சேவைக்கான கட்டணத்தை பல்வேறு காரணங்கள்அடிப்படையில் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள்தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

பின்னர் அவர்கள் தரப்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்க் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடான பழநியில் உள்ள கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், இக்கோயிலின் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்தம் மற்றும் தங்க ரதம் இழுப்பதற்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து பக்தர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. இதன்படி தங்கரத சேவைக்கான கட்டணம் தற்போது ரூ.2,000 ஆக உள்ளது. இதனை ரூ.2,500 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் 500 கிராம் பஞ்சாமிர்தம் விலை ரூ.40ல் இருந்து ரூ.45 அல்லது ரூ.50 ஆக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல கோடி ரூபாய் வருமானம் இருக்கும் பழநி மலைக்கோயிலில், இந்த கட்டண உயர்வு என்பது சாமானிய பக்தர்களை பெரிதும் பாதிக்கும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, பஞ்சாமிர்தம் மற்றும் தங்கரத சேவைக்கான கட்டணம் உயர்த்தும் முடிவினை கோயில் நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்து இருந்தனர்.

Related Stories: