வாஷிங்டன்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 107 நாட்களாக நீடித்து வந்த அமெரிக்கா-ஈரான் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இருநாடுகளின் இறுதி ஒப்பந்தம் வரும் 19ஆம் தேதி ஜெனீவா நகரில் கையெழுத்தாகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 107 நாட்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடும் போர் நடந்து வந்தது. பிப்ரவரி 28ல் இந்த போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சற்று இழுபறி நிலவிய சூழலில் தற்போது இரண்டு தரப்பும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. இந்த மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் எண்ணெய் மற்றும் சமையல் காஸ் கப்பல்கள் வெளியே வர முடியாததால் உலக நாடுகள் தத்தளித்தன. இந்நிலையில், பாகிஸ்தான், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தீவிர முயற்சியால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க உடன்படிக்கை தற்போது எட்டப்பட்டுள்ளது.
இந்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 14 அம்ச வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரான் மீதான கடல்சார் தடையை அமெரிக்கா நீக்க சம்மதித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 30 நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எவ்வித கட்டணமும் இன்றி கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், முடக்கப்பட்ட ஈரானின் ரூ.23 லட்சம் கோடி சொத்துக்களை 60 நாட்களில் விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ரூ. 1 லட்சம் கோடி நிதியை ஈரான் உடனடியாக கோரியுள்ளது. ஈரான் மீதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளன.
இந்த முடிவை அணுசக்தி தொடர்பான பிரச்னைகளை தீர்க்க 60 நாட்கள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை தயாரிக்காது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் ஒரு தரப்பாக இடம்பெறவில்லை. இருப்பினும் அமெரிக்கா-ஈரான் இடையிலான இந்த வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் வரும் 19ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது. இதற்கான தொழில்நுட்ப குழுவினரின் சந்திப்புகள் இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உறுதி செய்துள்ளார். உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்திய 107 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் இறுதி செய்துள்ளதாக அதிபர் டிரம்ப்பும் அறிவித்துள்ளார்.
அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில்,’இஸ்லாமிய குடியரசான ஈரானுடனான ஒப்பந்தம் இப்போது நிறைவடைந்தது. அனைவருக்கும் வாழ்த்துகள். ஹார்முஸ் நீரிணையை கட்டணமின்றி திறப்பதற்கும், அதே நேரத்தில் அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்குவதற்கும் நான் முழு அதிகாரம் அளிக்கிறேன். உலகக் கப்பல்களே, உங்கள் இயந்திரங்களை இயக்கத் தொடங்குங்கள். எண்ணெய் பாயட்டும். இந்தச் சிறந்த ஒப்பந்தம் இப்பகுதி முழுமைக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு வரும். பல அதிபர்கள் ஈரானுடன் அமைதி ஏற்படுத்த முயன்றனர், ஆனால் எனக்கு முன் அனைவரும் தோல்வியடைந்தனர். உண்மையான அமைதியை அடைய உதவும் ஒரு அதிபரை இப்பகுதித் தலைவர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானதும் நீரிணை திறக்கப்பட்டு, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன் மூலம் இப்பகுதிக்கும் உலகிற்கும் மீண்டும் இரு முனைகளிலும் எண்ணெய் விநியோகம் நடைபெறும்’ என்று தெரிவித்தார். இருப்பினும், ஒப்பந்தம் குறித்த விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.
ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி அரசு தொலைக்காட்சியில் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தினார்; ஆனால் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகும் வரை ஈரான் அதைச் செயல்படுத்தத் தொடங்காது என்று கூறினார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டு, மோதலை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்த பாகிஸ்தான், இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் தளத்தில்,’தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர். மோதலுக்கு ராஜதந்திர ரீதியிலான தீர்வைக் காண்பதில் அமெரிக்காவும் ஈரானும் காட்டிய உறுதிப்பாட்டிற்கு நன்றி. இந்த ஒப்பந்தத்தை எட்டுவதில் ஆதரவளித்த இந்த மத்தியஸ்த முயற்சியில் எங்களுடன் இணைந்த சகோதரர்களான கத்தார் நாட்டின் சிறந்த தலைமைத்துவத்திற்கும் மனமார்ந்த நன்றி. இவ்விவகாரத்தில் பெரும் பங்களிப்பை வழங்கிய சவுதி அரேபியா மற்றும் துருக்கி குடியரசின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்கும் நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன். தற்போது ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், மத்தியஸ்தர்கள் இந்த வாரம் தொடர்ச்சியான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வார்கள்.
நடைமுறைப்படுத்துவதற்கு முந்தைய இந்த விவாதங்கள், தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் விழாவிற்கான அடித்தளத்தை அமைக்கும்’ என்றார். பாக். பிரதமர் தனது பதிவில் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ஆகியோரை அவர் குறிப்பிட்டிருந்தார்.
முதலில் அறிவித்த பாகிஸ்தான் பிரதமர்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இந்நிலையில், இரண்டு தரப்புக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதை பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதல் நபராக அறிவித்தார்.
ஈரான் சொல்வது என்ன?
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானதை ஈரானும் உறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தங்கள் நாட்டின் கடற்பகுதி அமெரிக்க ராணுவ முற்றுகையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. லெபனான் உள்ளிட்ட பிராந்தியத்தின் அனைத்து பகுதிகளிலும் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதை ஈரானின் அரசு செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
ஈரான் மீதான தடை நீக்கம்
ஈரான் மீதான தடைகளை படிப்படியாக நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஈரான் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
லெபனானின் நிலை என்ன?
ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்,’ லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர்’ என்று கூறினார். ஆனால் இஸ்ரேல், இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுடன் இஸ்ரேல் சண்டையிட்டு வரும் லெபனானில் போர்நிறுத்தம் அவசியம் இடம்பெற வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வருகிறது.
போர் நிறுத்தத்தின் முக்கிய அம்சங்கள் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து 60 நாள் கால அவகாசம்
ஈரானின் அணுசக்தித் திட்டம் அணு ஆயுதத் தயாரிப்புக்கு வழிவகுக்கக்கூடும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் அஞ்சுகின்றன; போரைத் தொடங்குவதற்கு அந்நாட்டுத் தலைவர்கள் குறிப்பிட்ட முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும். ஈரான் தனது அணுசக்தித் திட்டம் அமைதியான நோக்கங்களைக் கொண்டது என்று வலியுறுத்தி வருகிறது; இருப்பினும், அணு குண்டுகளைத் தயாரிக்கத் தேவையான அளவு உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அதனிடம் உள்ளது. தற்போது இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு வரும் 60 நாள் கால அவகாசம், யுரேனியத்தை அகற்றுவதற்கான தொழில்நுட்ப விவரங்களை வகுக்கப் பயன்படுத்தப்படும் என்று ெதரிய வந்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை திறப்பு
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான வழிமுறைகள் உருவாகி வருகின்றன. இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்காக கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தத்தையே ஈரான் விரும்புவதாக அமைச்சர் அராக்சி கூறினார். போரின்போது ஈரான் கப்பல்களிடம் கட்டணம் வசூலித்தது. இது சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமெரிக்காவும் பிற நாடுகளும் கூறியுள்ளன. ஈரான் மற்றும் ஓமன் நாடுகளின் பிராந்திய எல்லைக்குள் அமைந்திருந்தாலும், இந்த நீரிணை நீண்ட காலமாக சர்வதேச நீர்ப்பகுதியாகவே கருதப்படுகிறது.
உலக நாடுகள் வரவேற்பு
உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்த அறிவிப்பை ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார். மேலும் சீனா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்தியாவின் எல்என்ஜி
கப்பல் ‘திஷா’ ஹார்முஸ் நீரிணையை கடந்தது
இந்தியாவின் எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) கப்பலான ‘திஷா’, ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த போர் மண்டலப் பகுதியிலிருந்து வெளியேறிய இந்தியக் கொடியை ஏந்திய முதல் எல்என்ஜி கப்பல் இதுவாகும். ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தலைமையிலான கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் ‘திஷா’ கப்பல், 62,370 மெட்ரிக் டன் எல்என்ஜி சரக்கை ஏற்றிச் கொண்டு இந்தியா வருவதாக கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த கப்பல் குஜராத்தில் உள்ள தஹேஜ் துறைமுகத்தை வரும் 18ஆம் தேதி வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த தேதியில் என்ன நடந்தது?
பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
மார்ச் 1: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்தது; இதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓர் இந்தியர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
மார்ச் 2: குவைத் தவறுதலாக அமெரிக்காவின் மூன்று போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது.
மார்ச் 4: இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கடற்படையின் ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ போர்க்கப்பல் அமெரிக்கக் கடற்படையால் டார்பிடோ மூலம் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
மார்ச் 5: இஸ்ரேல், அமெரிக்கத் தளங்கள் மற்றும் அப்பிராந்தியத்தைச் சுற்றியுள்ள நாடுகள் மீது ஈரான் புதிய தாக்குதல்களைத் தொடங்கியது.
மார்ச் 6: ஈரான் நிபந்தனையற்ற சரணடைதலை மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
மார்ச் 7: சரணடைவதற்கான டிரம்ப்பின் கோரிக்கையை ஈரான் நிராகரித்தது.
மார்ச் 8: சவுதி அரேபியாவின் குடியிருப்புப் பகுதி ஒன்றின் மீது ஏவுகணை அல்லது எறியம் ஏவுகணை விழுந்ததில், ஓர் இந்தியர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.
மார்ச் 9: ஈரானின் உயரிய தலைவராக இருந்த தனது மறைந்த தந்தைக்குப் பிறகு, அயதுல்லா மொஜ்தபா கமேனி அப்பதவியை ஏற்றார்.
மார்ச் 12: ஈரானின் புதிய உயரிய தலைவர் தனது முதல் பொது அறிக்கையை வெளியிட்டார்; தாக்குதல்களைத் தொடர்வதாக உறுதியளித்தார்.
மார்ச் 13: ஈரான் சரணடையும் நிலையில் உள்ளதாக ஜி7 தலைவர்களிடம் டிரம்ப் கூறினார்.
மார்ச் 17: அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஈரானின் உயரிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லரிஜானி கொல்லப்பட்டார்.
மார்ச் 18: ஈரானின் மிகப்பெரிய கடல்சார் ‘சவுத் பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் தொடர்பான கட்டமைப்புகள் தாக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்தது. ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் படுகொலை செய்யப்பட்டார்.
மார்ச் 20: சவுதி அரேபியாவில் ஓர் இந்தியர் கொல்லப்பட்டதாக இந்தியத் தூதரகம் அறிவித்தது.
மார்ச் 21: கடலில் தேங்கிக் கிடக்கும் ஈரானிய எண்ணெயை விற்பனை செய்வதற்கான தடைகளைத் தற்காலிகமாக நீக்குவதாக அமெரிக்கா அறிவித்தது.
மார்ச் 23: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஈரானிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மார்ச் 25: அமெரிக்காவின் போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்து, தனது சொந்தக் கோரிக்கைகளை முன்வைத்தது.
மார்ச் 26: ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நாட்டிற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை ஏப்ரல் 6 வரை டிரம்ப் நீட்டித்தார்.
மார்ச் 27: ஈரானின் அணுசக்தி நிலையங்கள் இஸ்ரேலியத் தாக்குதலுக்கு உள்ளாகின.
மார்ச் 30: குவைத்தில் நடந்த ஈரானியத் தாக்குதல்களில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
மார்ச் 31: போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ஐந்து அம்ச அமைதித் திட்டத்தை முன்வைத்தன.
ஏப்ரல் 3: ஈரானில் அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஏப்ரல் 6: அதிபர் டிரம்ப் அறிவித்த 45 நாள் போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்தது.
ஏப்ரல் 8: அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
ஏப்ரல் 11: துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கக் குழு, பாகிஸ்தானில் ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
ஏப்ரல் 12: பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை எட்டத் தவறின.
ஏப்ரல் 16: பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர், ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏப்ரல் 17: ஹார்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது என்று ஈரான் கூறியது.
ஏப்ரல் 18: ஹார்முஸ் நீரிணையைத் திறந்திருந்த முடிவை ஈரான் மாற்றிக்கொண்டது.
ஏப்ரல் 20: ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் ஈரானியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியது.
மே 8: ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவற்றைச் செயலிழக்கச் செய்தன.
மே 11: ஈரானுடனான போர்நிறுத்தம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக டிரம்ப் கூறினார்.
மே 13: ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல் ஒன்று தாக்கப்பட்டது.
மே 16: ஈரானியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெஹ்ரான் சென்றார்.
மே 24: ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பான ஈரான் உடனான ஒப்பந்தம் பெரும்பாலும் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறினார்.
மே 26: ஏவுகணை ஏவுதளங்கள் உட்பட ஈரான் மீது தற்காப்பு தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
மே 28: ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மற்றொரு தாக்குதலை நடத்தியது.
ஜூன் 1: அமெரிக்காவின் எம்க்யூ-1 பிரிடேட்டர் டிரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள ரேடார் மற்றும் டிரோன் கட்டுப்பாட்டு மையங்களை இலக்கு வைத்துத் தாக்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
ஜூன் 3: ஈரானிய ட்ரோன் குவைத் விமான நிலையத்தைத் தாக்கியதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜூன் 6: பஹ்ரைன் மற்றும் குவைத் நோக்கி ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டி ரோன்களை ஏவியது.
ஜூன் 7: அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெஹ்ரான் சென்றார்.
ஜூன் 8: இஸ்ரேலும் ஈரானும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்திக்கொண்டன; இது இப்பகுதியை மீண்டும் முழு அளவிலான போருக்குள் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தியது.
ஜூன் 9: அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அமெரிக்கா பதிலடி ெகாடுத்தது.
ஜூன் 10: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலாவு நாட்டு கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதில், அதில் இருந்த 24 இந்திய மாலுமிகளில் மூவர் உயிரிழந்தனர்.
ஜூன் 11: மீண்டும் தொடங்கிய மோதலின் இரண்டாம் நாளில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது; இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஜூன் 15: போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள்
1. அமெரிக்க அதிபர் டிரம்ப்
2. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்
3. மேற்கு ஆசியாவிற்கான டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப்
4. டிரம்ப் மருமகன் ஜாரெட் குஷ்னர்
5. ஈரான் உச்ச பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி லாரிஜானி
6. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி
7. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப்
8. பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர்
9. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
10. பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தார்
11. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி
எண்ணெய், எரிவாயு
விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்ப மாதங்கள் ஆகலாம்
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதிக எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலைகள் மற்றும் எரிசக்தி விநியோகச் சிக்கல்கள் உடனடியாகத் தீர்க்கப்படாது. உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு எரிசக்தி நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க மாதங்கள் ஆகலாம் என்று எரிசக்தி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கச்சா எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டு செல்வது மற்றும் சுத்திகரிப்பதில் உள்ள மெதுவான செயல்முறை மற்றும் அந்த நீரிணை வழியாகப் பயணிப்பதில் உள்ள பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் ஆகியவற்றால், இதன் விளைவு உடனடியாகத் தெரியாது என்று அவர்கள் கூறினர்.
கச்சா எண்ணெய் விலை குறைந்தது
போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி அறிவிப்பு வெளியானதும் சர்வதேச அளவுகோலாகக் கருதப்படும் ‘ப்ரெண்ட்’ எண்ணெய் விலை பீப்பாய்க்கு 3.45 டாலர் குறைந்து 83.89 டாலராக இருந்தது. அமெரிக்காவின் முக்கிய கச்சா எண்ணெய் விலை 4.03 டாலர் குறைந்து பீப்பாய்க்கு 80.85 டாலராக இருந்தது. போர் தொடங்குவதற்கு முன்பு பீப்பாய்க்கு சுமார் 70 டாலராக இருந்த விலையை விட, தற்போதைய விலைகள் இன்னும் கணிசமாக அதிகமாகவே உள்ளன.
பாகிஸ்தானுக்கு பெருமை
நாடாளுமன்றத்தில்
பிரதமர் ஷெபாஸ் தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதியை ஏற்படுத்தியது பாகிஸ்தானுக்கு பெருமை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். இது பற்றி அவர் பேசுகையில்,’ இது இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மட்டுமல்ல; இது அமைதி மற்றும் பேச்சுவார்த்தையின் வெற்றி – ஒரு தூதரக ரீதியிலான வெற்றி. வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல். மூன்று மாதங்கள் மற்றும் 16 நாட்கள் நீடித்த அயராத முயற்சிகளுக்குப் பிறகு, லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு உடனடி மற்றும் நிரந்தரமான முடிவை அமெரிக்காவும் ஈரானும் அறிவித்துள்ளன.
இதன் விளைவாக, உலகம் முழுவதும் இந்த மகத்தான நாளைக் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இன்று பாகிஸ்தானில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வசிக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் பெருமைக்குரிய நாளாகும். இந்த அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படும் உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையின் பலன்களை ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் அரசாங்கம் கொண்டு சேர்க்கும் என்று நான் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தீவிரப் பங்காற்றினார். அவர் மனச்சோர்வடையாமல் தொடர்ந்து செயல்பட்டதால் போர் நிறுத்தம் ஏற்பட்டது’ என்றார்.
மேற்கு ஆசிய ஒப்பந்தத்தை வரவேற்றார் பிரதமர் மோடி
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை பிரதமர் மோடி வரவேற்றார். இந்த ஒப்பந்தம் அப்பகுதியில் அமைதியை மீட்டெடுக்கவும், தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யவும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில்,’ உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரச் சீர்குலைவையும், பல நாடுகளில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய மேற்கு ஆசிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை நான் வரவேற்கிறேன். இந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவது அப்பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புகிறது. மீதமுள்ள விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நிலையான இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை இந்தியா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எம்டி ஜல்வீர் கப்பலின் மீட்கப்பட்ட 20 பணியாளர்களை சந்தித்த இந்தியத் தூதர்
ஜூன் 11 அன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலால் இந்தியாவுக்கு வந்த சரக்கு கப்பல் எம்டி ஜல்வீர் பாதிக்கப்பட்டது. இதில் இருந்த இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் மஸ்கட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓமனுக்கான இந்தியத் தூதர் பிரசாந்த் பிசே, நேற்று மஸ்கட்டில் எம்டி ஜல்வீர் கப்பலின் 20 இந்தியப் பணியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இவர்கள் விரைவில் இந்தியாவுக்குத் திரும்பவுள்ளனர்.
லெபனான், சிரியா, காசாவில் கைப்பற்றப்பட்ட நிலங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறாது
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால ஒப்பந்தம் நிலுவையில் உள்ள நிலையில், லெபனானில் கைப்பற்றப்பட்ட நிலங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறாது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்தார். லெபனான், சிரியா மற்றும் காசா முனை ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் தற்போது தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலங்களில் காலவரையறையின்றி தொடர்ந்து இருக்கத் திட்டமிட்டுள்ளதாக காட்ஸ் கூறினார்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவதுடன், இந்த இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் நிபந்தனையாக இணைத்துள்ளது. லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்காக ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலைத் தாக்கினால், ஈரான் மீது மிகப்பெரிய பலத்துடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்றும் காட்ஸ் எச்சரித்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளில், காசா, லெபனான் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் மொத்தம் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. இந்தப் பரப்பளவு நியூயார்க் நகரத்தை விடச் சற்று சிறியதாகும்.
