செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? நாசரேத், ஜூன் 15: நாசரேத் சந்தி பஜார் நிறுத்தத்தில் மீண்டும் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட புனித லூக்கா மருத்துவமனை முன்பு, சந்தி பஜாரில் பல வருடங்களாக பஸ் நிறுத்தம் இருந்து வந்தது. இவ்வழியாக தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி அருகே மெயின் ரோட்டில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு அனைத்து பஸ்களும் அந்த நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.
இதனால் புனித லூக்கா மருத்துவமனை முன்பு மற்றும் சந்தி பஜார் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் இப்பகுதியில் பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து தொழிலதிபர் பிள்ளையன்மனை சாமுவேல் ராஜேந்திரன் கூறுகையில், சந்தி பஜார் பஸ் நிறுத்தம் ஒரு முக்கியமான பஸ் நிறுத்தமாகும். இதனருகே பரி.யோவான் பேராலயம், பள்ளிக்கூடம் மற்றும் கடைகள், வீடுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் ஒரு சில ஆம்னி பஸ்கள், சந்தி பஜாரியிலே ஆட்களை இறக்கி விட்டு சென்று விடுகின்றன.
இதனால் ஆம்னி பஸ்களில் வருபவர்கள் மற்றும் வியாபாரிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவியர் என அனைத்து தரப்பினரும் இங்குதான் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் சந்தி பஜார் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காததால் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நாசரேத் சந்தி பஜார் பஸ் நிறுத்தத்தில் மீண்டும் அனைத்து பஸ்களும் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
