×

மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடி; திரிணாமுல் அதிருப்தி எம்.பிக்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்தனர்;

புதுடெல்லி: மேற்கு வங்க பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அக்கட்சியின் எம்எல்ஏக்கள் 64 பேர் தனி அணியாக பிரிந்தனர். அந்த அணியை சேர்ந்த ரிதாப்ரதா பானர்ஜியை சட்ட பேரவை எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் அங்கீகரித்துள்ளார். அதை தொடர்ந்து மக்களவையில் கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் தங்களை உண்மையான திரிணாமுல் என்று அங்கீகரிக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தனர். திரிணாமுல் கட்சிக்கு மக்களவையில் மொத்தம் 28 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், அதிருப்தி குழுவின் தலைவரான காகோலி கோஷ் நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தார். சந்திப்புக்கு பின் கூறுகையில், எங்கள் அணியில் மேலும் 2 எம்பிக்கள் சேர்ந்துள்ளனர். இதனால் அதிருப்தி எம்பிக்கள் பலம் 22 ஆக உயர்ந்துள்ளது. நாங்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்துள்ளோம்.எனவே இதை அங்கீகரித்து எங்களுக்கு மக்களவையில் தனி இடம் ஒதுக்கும்படி சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார். தேசியவாத குடிமக்கள் கட்சி, திரிபுராவில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட ஆனால், அங்கீகாரம் பெறாத கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. திரிணாமுல் அதிருப்தி எம்.பி.க்கள் பிரதமர் மோடி அரசை ஆதரிக்க உள்ளனர்.

இதனிடையே, திரிணாமுல் காங்கிரசில் உள்ள அதிருப்தி எம்பிக்களை தனி பிரிவாக அங்கீகாரம் எதுவும் அளிக்கக்கூடாது என வலியுறுத்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு திரிணாமுல் கட்சி மக்களவை குழு தலைவர் அபிஷேக் பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். எம்பிக்கள் கீர்த்தி ஆசாத் மற்றும் சகாரிகா கோஷ் ஆகியோர் நேற்று ஓம் பிர்லாவிடம் கடிதத்தை நேரில் வழங்கினர். அதிருப்தி எம்பிக்களின் இந்த நடவடிக்கைகள் மம்தாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mamta Banerjee ,Trinamul ,M. Bu ,Nationalist Citizens Party ,NEW DELHI ,WEST BENGAL ,Akkad ,Ritabrata Banerjee ,Legal Council ,
× RELATED ராஜஸ்தானின் ஷரு நகரில் வானுயர...