மத்தியப் பிரதேசம்: தண்டவாளத்தில் இறங்கிய பயணிகள் மீது விரைவு ரயில் மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலிலிருந்து தண்டவாளத்தில் இறங்கிய பயணிகள் மீது விரைவு ரயில் மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலிலிருந்து பலரும் தண்டவாளத்தில் இறங்கிய நிலையில் எதிரில் வந்த பெரோஸ்பூர்-சியோனி பாதாள கோட் விரைவு ரயில் மோதி ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய ரயில்வேயின் ஜான்சி கோட்டத்திற்கு உட்பட்ட ஹேதாம்பூர் – தோல்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மாலை 4:15 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. கஜுராஹோ – உதய்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தபோது, இன்ஜினுக்கு அடுத்து இருந்த பொதுப் பெட்டியிலிருந்து பயணி ஒருவர் அவசர கால சங்கிலியை இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரயில் நின்றவுடன், அதிலிருந்த சில பயணிகள் கீழே இறங்கி அருகில் இருந்த மற்றொரு ரயில் தண்டவாளத்தின் வழியாக நடக்கத் தொடங்கியுள்ளனர். அப்போது பயணிகள் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து வடமத்திய ரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில்: “இன்டர்சிட்டி ரயில் நின்றுகொண்டிருந்த சமயத்தில், அதே பகுதியில் உள்ள மற்றொரு தடத்தில் பெரோஸ்பூர்-சியோனி பாதாள கோட் விரைவு ரயில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது அந்த ரயில் எதிர்பாராதவிதமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்,” என்று தெரிவித்தார்.

விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், ரயில்வே பாதுகாப்புப் படை, அரசு ரயில்வே போலீஸ், ரயில்வே மூத்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து எப்படி நேரிட்டது என்பது குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில்கள் நடுவழியில் நின்றாலோ அல்லது இயக்கத்தில் இருக்கும்போதோ, பயணிகள் உரிய அனுமதியின்றி கீழே இறங்க வேண்டாம் என்றும், ரயில்வேயின் பாதுகாப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: