ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேணும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஜனநாயகத்தை பாதுகாக்க ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு முதல் எம்பியாக இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி (53), கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் 230க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.

நவீன இந்தியா உருவாவதற்கு முன்பே காங்கிரஸ் ஒரு எதிர்ப்பு இயக்கமாக உருவானது என்றும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக அவர் ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி நடந்த ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய உரையை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘ஒன்றிய பாஜக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிடியில் தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, உளவு அமைப்புகள் என அனைத்தும் சிக்கியுள்ளன. குஜராத், சட்டீஸ்கர், அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை நேரில் பார்த்துள்ளேன்.

100 சதவீதம் தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என்பதை கூட்டணி தலைவர்கள் உணர வேண்டும். என்னுடைய யூடியூப் பக்கத்தை 1 கோடி பேர் பின்தொடர்ந்தாலும், அதன் வீச்சு திட்டமிட்டு முடக்கப்படுகிறது. நீட் தேர்வு முறைகேடு, சிபிஎஸ்இ பிரச்னை உள்ளிட்ட மக்கள் சார்ந்த விஷயங்களில் தீவிர போராட்டங்களை முன்னெடுத்து, வரும் 2029ம் ஆண்டு தேர்தலை விட ஜனநாயகத்தை மீட்பதே நமது வியூகம்’ என்று கூறினார்.

Related Stories: