×

உலகின் முதல் டிரில்லியனர் சாதனை படைத்த எலான் மஸ்க்

நியூயார்க்: உலகிலேயே முதல் டிரில்லியனர் என்ற சாதனையை எலான் மஸ்க் படைத்துள்ளார். உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்நிறுவனத்தின் பங்குகள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனே முதலீட்டாளர்கள் இதனை வாங்க தொடங்கினர்.

ஒரு பங்கின் விலை 135 டாலருக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதிகபட்சமாக 176.50 டாலர் வரை சென்று, முதல் நாள் முடிவிலேயே 161 டாலராக நிறைவடைந்தது. வர்த்தகத் தொடக்கத்திலேயே பங்கின் மதிப்பு 21 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்ததைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.15 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டுள்ள எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே 1 டிரில்லியன் டாலர் (ரூ.95 லட்சம் கோடி) சொத்து மதிப்பை எட்டிய முதல் டிரில்லியனர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்த பட்டியலிடலின் மூலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் பொதுப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலேயே ஆறாவது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு நிறுவனத்தில், சாமானிய முதலீட்டாளர்களும் நேரடியாகப் பங்குகளை வாங்க இந்த ஐபிஓ வழிவகுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் மூலம் உலக புகழ் பெற்றார்.

கடந்த 2022ல் எக்ஸ் சமூக வலைதளத்தை கையகப்படுத்தி தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆவார். இந்நிறுவனம் ராக்கெட்டுகளைத் தாண்டி வெகுவாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம், ஸ்டார்லிங்க் என்ற செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவையைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. இது அந்நிறுவனத்திற்கு ஒரு பெரிய பண ஆதாரமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு நிறுவனம் 4.4 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியது.

Tags : Elon Musk ,New York ,SpaceX ,Nasdaq ,United States ,
× RELATED இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை...