×

நாளை மறுதினம் தடைக்காலம் நிறைவு; விசைப்படகின் டீசலுக்கு சாலை, பசுமை வரி ரத்து செய்யப்படுமா?.. மீனவர்கள் எதிர்பார்ப்பு

 

நாகர்கோவில்: விசைப்படகு மீனவர்களுக்கான தடைக்காலம் நாளை மறுதினம் நிறைவடைவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். டீசல் விலை ஏற்றத்தால் மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் மேற்காசிய போர் பதற்றம் காரணமாக தற்போது பெட்ரோல், டீசல், சமையல் காஸ், வர்த்தக சிலிண்டர் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. டீசல் விலை உயர்வால் லாரிகளின் வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உயர்ந்திருக்கின்றன.

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வால் உணவு பண்டங்களின் விலைகள் உயர்ந்து உள்ளன. இந்த நிலையில் டீசல் விலை உயர்வால், மீனவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாகக் கொண்டு விசைப்படகுத் தொழிலில் ஈடுபடும் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.​ இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் கடந்த ஏப்ரல் 15 முதல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

மீன்பிடி தடைக்காலம் நாளை மறுதினம் 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தடைக்காலம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.​ மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் உள்ள பழைய பலகைகளை மாற்றி புதிய பலகைகள் பொருத்துவது, ​எஞ்சின்களை சீரமைப்பது ​படகுகளுக்கு வர்ணம் தீட்டுவது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.​ மேலும், அவர்கள் மீன்பிடி வலைகளையும் சரிசெய்து வருகின்றனர்.​ வருகிற 15-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்குப் புறப்பட்டுச் செல்கின்றன.

இந்த விசைப்படகுகள் அன்று இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்புவார்கள். தடைக்காலம் முடிந்து மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும் விசைப்படகுகளில் சிலா, வாவல், நெத்திலி, பாறை, சூரை, மீன், நெய்மீன், கணவாய், இறால், நண்டு போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.​இரண்டு மாதங்களுக்குப் பிறகு வருகிற 15-ஆம் தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே டீசல் விலை உயர்வால், விசைப்படகுகளுக்கான செலவு அதிகரித்துள்ளது. லிட்டர் ரூ.90 வரை இருந்த டீசல் தற்போது ரூ.100 ஐ தாண்டி உள்ளன. இதனால் டீசலுக்கான வரிகளை குறைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் குமரி மாவட்டம் வந்த தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் 50 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில் தலைமையில் மீனவர்கள் வழங்கினர். அதில், மீனவர்கள் கடலில் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் வசூலிக்கப்படும் ரூ.18 சாலை வரி மற்றும் பசுமை வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மீனவர்களுக்கான டீசல் மானியத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் கடலில் மாயமாகும் மீனவர்களின் உடல் கிடைக்காவிட்டாலும், ஒரு ஆண்டிற்குள் இறப்புச் சான்றிதழ் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கடல் அலை தடுப்புச் சுவர் மற்றும் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்கும் போது, பாரம்பரிய கடல் அனுபவம் கொண்ட மீனவர்களின் கருத்துக்களைக் கேட்டு, அவர்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட 50 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Nagercoil ,
× RELATED கொடைக்கானலில் பிரையன்ட் பூங்காவில்...