×

விடாது பெய்யும் மழையிலும் நீர்மட்டம் உயராத பொய்கை அணை: நீரோடைகளில் ஆக்ரமிப்பை அகற்ற கோரிக்கை

 

ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்ற நிலையில் பொய்கை அணை நீர்மட்டம் உயராத அவலம் தண்ணீர் வரும் ஓடையை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி சாலையில் செண்பகராமன்புதூர் மரப்பாலம் பகுதியிலிருந்து சமத்துவபுரம் செல்கின்ற சாலையின் முடிவில், வடக்கு மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில், 1202 மீட்டர் நீளத்துடனும், 42.65 அடி கொள்ளளவுடனும் கொண்ட பொய்கை அணை அமைந்துள்ளது.

இந்த அணையின் மூலம் குமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1357 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கடந்த 2.10.2000-ல் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையில் ஆற்றுமதகு, கால்வாய் மதகு என 2 மதகுகள் உள்ளன. இதில் ஆற்று மதகு மூலம் கரும்பாட்டுக்குளம், கிருஷ்ணன்குளம், செண்பகராமன் பெரியகுளம், தோவாளை பெரியகுளம், பொய்கை குளம், குட்டிகுளம், வைகை குளம், ஆரல் வாய்மொழி பெரியகுளம் ஆகிய 8 குளங்களுக்கு தேவையான நீர் கொண்டு செல்லப்படுகிறது.

வாய்கால் மதகுகள் மூலம் ஆரல்வாய்மொழி பகுதியிலுள்ள அன்னு வத்திகுளம், லெட்சுமி புதுக்குளம், அத்தி குளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகாவுக்குட்பட்ட சாலை புதுக்குளம்,தெற்கு சிவகங்கை குளம் , மேலப்பாலார்குளம், கீழப்பாலார்குளம், பழவூர் பெரியகுளம் ஆகிய 8 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள சுங்கான் ஓடை மற்றும் இறப்பை ஆறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் தண்ணீர் வரத்து இருந்த நிலையில், இரு ஓடைகளிலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டும் புதர்கள் நிறைந்தும் காணப்பட்டதால் இந்த ஓடையின் மூலம் வருகின்ற மழை தண்ணீர் அணைக்கு முறையாக வராத காரணத்தினால் மழைக்காலங்களில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் பொய்கைஅணை கட்டி திறக்கப்பட்ட நாளிலிருந்து பல வருடங்களாக மழைக்காலங்களிலும் முழு கொள்ளளவை எட்டாத நிலையில் இருந்து வந்தது.

இதனால் விவசாயிகள் இந்த அணைக்கு தண்ணீர் வருகின்ற இரு ஓடைகளையும் சரி செய்து தூர்வாங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் எழுப்பப்பட்ட தொடர் புகாரையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பொதுப்பணி துறை சார்பில் பொய்கை அணையை ஆய்வு செய்து அணைக்கு தண்ணீர் வருகின்ற சுங்கான் ஓடை மற்றும் இறப்பை ஆறு ஓடைகளின் கரைப்பகுதிகள் சரி செய்யப்பட்டு மழைக்காலத்தில் சுங்கான் ஓடையில் இருந்து பிரிந்து செல்கின்ற தண்ணீர் கடுக்கரை பகுதியில் உள்ள இறப்பை ஆறு வழியாக பழையாற்றில் கலந்து வீணாகி வருவதால் தான் அணைக்கு நீர் சரியாக வரவில்லை என்பதையறிந்து பொதுப்பணி துறை மூலம் 3.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மேற்படி ஓடை பகுதிகளில் ஏற்பட்டுருந்த மண் சரிவுகளை அகற்றிவிட்டு ஓடையின் இரு பகுதிகளிலும் கருங்கல்லினால் பக்க சுவர் அமைத்து உயர்த்தியும், ஓடையின் இடங்களில் காங்கிரிட் தரைத்தளம் அமைக்கப்பட்டதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு பெய்த கனமழையின்போது பொய்கை அணையின் நீர்மட்டம் முதன்முதலாக 29 அடியாக உயர்ந்தது. 2021-ம் ஆண்டு 42.65 அடியை எட்டியது.

இந்நிலையில் பொய்கை அணைக்கு தண்ணீர் வருகின்ற இரண்டு ஓடையினையும் தொடர்ந்து பராமரிப்பு செய்யாத காரணத்தாலும், இந்த ஓடை முழுவதும் புதர்கள் நிறைந்து பக்க சுவர்கள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் குமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அதிகளவு மழை பொழிந்தும் கூட மேற்படி பொய்கை அணைக்கு மட்டும் போதிய நீர் வரத்து இல்லாமல் சுமார் 8 அடி முதல் 15 அடி அளவிலே நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இக்காலகட்டத்தில் பெரும் கெள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் பல முறை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கூட அணையில் போதுமான தண்ணீர் பெருக்கம் இல்லாததால், செண்பகராமன்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.எனவே பொய்கை அணைக்கு தண்ணீர் வருவதற்கு ஆதரமாக உள்ள மேற்கண்ட இரு ஓடைகளையும் பொதுப்பணித்துறை சார்பாக உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து பொய்கை அணை முழு கொள்ளளவை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர் .

Tags : Kumari district ,Chenpakaramanputur ,Auralvaimozhi Road, Kumari District ,
× RELATED கொடைக்கானலில் பிரையன்ட் பூங்காவில்...