திருப்பூர்: கோவை போத்தனூர் அடுத்த, இந்திரா நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (31). இவரது தம்பி நவீன் (29). இவர் ஆன்லைன் டிரேடிங் வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர் நிர்மல்குமார் (29). இவர்கள் இருவரையும் கடத்தி வைத்துள்ளதாகவும் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய திருப்பூர் நல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வரும் மோகன் (37) மற்றும் ஆனந்தன் (38) மற்றும் திருப்பூரை சேர்ந்த காளிதாஸ் (31) ராம்குமார் (31) என 4 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
அதோடு கடத்தப்பட்ட வாலிபர்கள் நவீன், நிர்மல்குமார் ஆகிய இருவரும் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததையடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் முக்கிய நபரான ரவுடி கருப்பசாமி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர் தப்பி ஓட முயன்றபோது கால் முறிந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்களான ஆனந்தன், மோகன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
