சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று டெல்லி, குடியரசு தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 11வது ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பங்கேற்று பேசியதாவது: தமிழ்நாட்டின் நலன் களையும் மக்களின் விருப்பங்களையும் உறுதியாக பாதுகாக்கும் வேளையில், ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர் வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் பயணத்திற்கும் இன்றியமையாத சில முக்கிய முன்னுரிமைகளை ஆட்சிமன்றத்தின் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
* தமிழ்நாடு கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து முதலீடு செய்யும். ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடை பயிற்சிகள் மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும் ‘இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்தை’ செயல்படுத்த விழைகிறேன்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறன் மையங்களை அமைப்பதற்கும், செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, மேகக் கணினி தொழில்நுட்பம், மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி தொடர்புடைய துறைகளில் பயிற்சி அளிப்பதற்கும் ஒன்றிய அரசின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம்.
* இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மருத்துவப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
* ‘வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்’ ஒன்றை எங்கள் அரசு முன்மொழிகிறது. மேலும், அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்றுவதற்காக ஒன்றிய அரசின் நிதி உதவியையும் நாடுகிறேன்.
* தமிழ்நாட்டிற்கு இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையை கோயம்புத்தூரில் அமைக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு தேவையான நிலத்தை மாநில அரசு வழங்கும்.
* பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறப்பு பெண்கள் பாதுகாப்பு பிரிவுகள், பொது போக்குவரத்தில் அவசரகால நடவடிக்கை அமைப்புகள், விரிவாக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா வலைப்பின்னல்கள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றை அமைக்க முன்மொழிகிறோம். மேலும், தொழில்நுட்பம் சார்ந்த காவல் பணிகள், விரைவான நடவடிக்கைகளுக்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடங்கப்பட்டுள்ளது.
* விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து, குறு, சிறு மற்றும் பிற விவசாயிகளை உள்ளடக்கிய வகையில் ரூ.2,045 கோடி மதிப்பிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
* பாக் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பதையும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை விடுவிப்பதையும் உறுதி செய்யுமாறு இந்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். மேலும், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்யவும் தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
* தமிழ்நாட்டின் 1,076 கிலோ மீட்டர் நீள கடற்கரைப் பகுதி அடிக்கடி புயல்கள் மற்றும் வெள்ளப் பேரிடர்களால் பாதிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, கடற்கரை நகரங்களில் நிரந்தர வெள்ளத்தடுப்புக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், உயிரிழப்பில்லா பேரிடர் மேலாண்மை இயக்கத்தைச் செயல்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய உட்கட்டமைப்புகளை உள்ளடக்கிய ‘காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம் 2045’ கீழ் ஒன்றிய அரசின் மேம்பட்ட ஆதரவையும் தமிழ்நாடு நாடுகிறது.
மேலும், குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளித் துறையுடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள விண்வெளி உற்பத்தி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும் என இந்திய அரசின் கவனத்தையும் ஆதரவையும் தமிழ்நாடு எதிர்பார்க்கிறது. இதன்மூலம் உந்துபொருள் முதல் ஏவு வாகனங்கள் தயாரிப்பு வரை முழுமையான உற்பத்தி திறன் உருவாகி, உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்காற்றும் வாய்ப்பு ஏற்படும்.
* தமிழ்நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் வழித்தடங்களை உரிய நேரத்தில் மேம்படுத்துவது அவசியமாகும். எனவே, பின்வரும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன்:
* ஜி.எஸ்.டி. சாலையின் செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை 6 வழிச்சாலையாக மேம்படுத்துதல்.
* திருச்சி (பஞ்சப்பூர்) – ஜீயபுரம் – கரூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்.
* கரூர் – கோயம்புத்தூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்.
* மாதவரம் – சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் அமைத்தல்.
* சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் அமைத்தல்.
* ஒகேனக்கல் மூன்றாம் கட்ட கூட்டுக்குடிநீர் வழங்கல் திட்டத்திற்காக ரூ.2,283.40 கோடி அளவிலான உறுதியளிக்கப்பட்ட ஒன்றிய நிதி உதவியை இந்திய அரசு வழங்க வேண்டும்.
* ‘ஒருங்கிணைந்த கல்வி’ திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை, எவ்வித நிபந்தனைகளுமின்றியும், புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தவோ அல்லது மும்மொழி கொள்கையை அமல்படுத்தவோ வற்புறுத்தாமலும் விரைவாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.
* திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
* தமிழ்நாட்டிற்கு 2வது எய்ம்ஸ் மருத்துவமனையை கோயம்புத்தூரில் அமைக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு தேவையான நிலத்தை மாநில அரசு வழங்கும்.
