சென்னை: தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரில் பார்த்து செய்தியாக வெளியிட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கும். இந்த இருக்கையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக இருக்கை கமிட்டி குழு ஒன்று அமைக்கப்படுவது வழக்கம். இதில் முன்னணி பத்திரிகை நிருபர்கள் இடம்பெறுவார்கள். அதன்படி, தவெக ஆட்சி பதவியேற்ற பிறகு 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினத்தந்தி, தினமணி, மாலைமுரசு, டெக்கான் கிரானிக்கல், நியூஸ்-18, பாலிமர் என பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை சார்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். வழக்கமாக இந்த குழுவை பேரவை செயலாளராக இருப்பவர்தான் நியமித்து, சபாநாயகர் ஒப்புதல் பெற்று அறிவிக்க வேண்டும். ஆனால், தற்போது இந்த கமிட்டியை பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனா தான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, அமைச்சர் ஆதர் அர்ஜுனா தான் அனைத்து துறையிலும் தலையிட்டு, அவருக்கு வேண்டிய நபர்தான் பதவியில் இருக்க வேண்டும், தான் சொல்வது தான் நடக்க வேண்டும் என்று பஞ்சாயத்து செய்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. தற்போது, பத்திரிகையாளர் கமிட்டி அமைப்பதிலும் இவர்தான் முழு பங்காற்றி உள்ளார். இவரது அலுவலகத்தில் இருந்து, தன்னுடைய லேப்டாப் மூலமே கமிட்டி அமைத்து சட்டப்பேரவை பெண் செயலாளருக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கியுள்ளாராம்.
பேரவை முன்னவராக உள்ள அமைச்சர் செங்கோட்டையன் தலையீடு கூட இதில் இல்லாமல், அவரும் ஓரங்கட்டப்பட்டு உள்ளார். இந்த பத்திரிகையாளர்களின் கமிட்டி கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தலைவர், துணை தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதன்படி, தினத்தந்தி நிருபர் தலைவராகவும், தினமணி நிருபர் துணை தலைவராகவும், செயலாளராக இந்து பத்திரிகையை சார்ந்தவர்கள் இன்று நடைபெறும் கமிட்டி கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுவும், முழுக்க முழுக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தலையீட்டின் கீழ் தான் நடக்க உள்ளதாகபேரவை செயலக ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த குழுவினர் தான் பேரவைக்குள் செய்தி சேகரிக்க செல்லும் நிருபர்களுக்கான இருக்கைகளை ஒதுக்குவார்கள். அதன்படி, ஆளுங்கட்சிக்கு சாதகமாக செய்திகளை பிரசுரிக்கும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு தரை தளத்தில் இருக்கை ஒதுக்கப்படும்.
அதேநேரம், ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் முக்கியமான சில பத்திரிகைகளுக்கு முதல் மாடியில் உள்ள இருக்கை ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் தளத்தில் இருந்து பேரவை நிகழ்வுகளை முழுவதுமாக பார்க்க முடியாது. அதனால், ஆளுங்கட்சிக்கு எதிரான பத்திரிகை என்று, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தீர்மானித்து மேல் இருக்கைக்கு மாற்ற பேரவை இருக்கை கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று நடைபெறும் கூட்டத்தில் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
