சென்னை: புதுச்சேரியில், ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கருணாஸை ஜூன் 18ம் தேதி காணொலியில் ஆஜர்படுத்துமாறு சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024 மார்ச் 2ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். 2 நாட்களுக்குப் பின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
புதுச்சேரியை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த முத்தியால்பேட்டை போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ், விவேகானந்தன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பரில் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, கருணாஸுக்கு எதிரான வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த மே 8ம் தேதி தீர்ப்பளித்தது. தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, ஜூன் 18ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கருணாஸுக்கு உத்தரவிட்டது. அன்றைய தினம், கருணாஸை காணொலியில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
