காற்றுடன் பெய்த மழை மின்சாரம் தாக்கி பசு பலி

ராமநாதபுரம், ஜூன் 11: ராமநாதபுரத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்த போது மின் வயர் அறுந்து விழுந்து பசு பலியானது. ராமநாதபுரம் நகராட்சி பகுதி, பாரதிநகர், டி பிளாக், பட்டிணம்காத்தான், கலெக்டர் அலுவலக பகுதி, நொச்சிவயல், அச்சுந்தன்வயல், முதுநாள் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் நேற்று காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று இதமான சூழ்நிலையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் நொச்சிவயலை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் மேய்சலுக்காக 10 பசு மாடுகளை அழைத்து சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு தெருவில் இருந்த மின் வயர் அறுந்து கீழே விழுந்துள்ளது. இதில் ஒரு பசு மாடு மீது விழுந்ததால் பசு துடிதுடித்து பலியானது. மின்சாரத்தை நிறுத்தி மின் வயர்களை ஊழியர்கள் சீரமைத்தனர்.

 

Related Stories: