×

கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி மீனவ பெண்கள் போராட்டம்: அமைச்சருக்கு எதிராக கோஷம்

காலாப்பட்டு: விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, பெரிய கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும், நடுக்குப்பம் மீனவர்களுக்கும் இடையே இடுகாடு இடப்பிரச்னை நீண்ட நாட்களாக இருந்தது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்ட நிலையில், அவரது சடலத்தை அடக்கம் செய்ய சென்றபோது மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் சடலத்துடன் ஆதிதிராவிட மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மீனவர்கள் எதிர்தரப்பினரின் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து சேதப்படுத்தினர். அவர்கள் தாக்கியதால் 10 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக மீனவர்கள் தரப்பில் 30 பேர் மீது கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வானூர் தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே அமைதி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில், கோட்டாட்சியர் முருகேசன் பேசுகையில், மயான இடத்தில் 21 பழுதடைந்த படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதனை 2 நாட்களில் அகற்ற வேண்டும். இவர்களுக்கு படகுகளை நிறுத்தி கொள்ள கடற்கரையையொட்டி விரைவில் இடம் ஒதுக்கி தரப்படும். மயான இடத்தை ஏற்கனவே அளவீடு செய்துள்ளோம். இந்த இடத்தில் எல்லை கல் நடப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் 100க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் நடுக்குப்பம் கடற்கரையில் படகுகள் நிறுத்தப்பட்ட இடத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அங்கு நின்றபடி தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியபடி, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விசிக அமைச்சர் வன்னி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தகவல் கிடைத்து அங்கு வந்த கோட்டக்குப்பம் போலீசார், பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த கயிற்றை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசு ஆதிதிராவிட மக்களுக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறது. எங்கள் படகுகளை அப்புறப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் இடுகாட்டை அளந்து கற்கள் நடப்பட்டது. இதனை கண்ட மீனவ பெண்கள் ஆத்திரமடைந்த அந்த கற்களை பிடுங்கி கடலுக்குள் வீசியதோடு, தொடர்ந்து நான்கு மணி நேரத்துக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலமாக படகுகளை அகற்றி இடுகாட்டுக்கு இடம் ஒதுக்கும் பணியை அதிகாரிகள் துவக்கினர். ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு, பணிகளை தடுக்க முயன்றனர்.

இதற்கிடையே மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தொலைபேசி மூலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவப் பெண்களை தொடர்பு கொண்டு பேசினார். இரு நாட்களில் நேரில் ஆய்வு செய்து உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தார். எனவே போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அமைச்சரிடம் போராட்டம் நடத்தும் தங்களை போலீசார் தாக்குவதாக புகார் தெரிவித்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட 30 மீனவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், பெண்கள் போராட்டத்தில் குதித்ததால் நடுக்குப்பம் மீனவ கிராமமே பரபரப்புடன் காணப்படுகிறது.

Tags : Kalapattu ,Villupuram district ,Vanur taluka ,Periya Kottakuppam ,Adi Dravidar ,Nadukuppam ,
× RELATED புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம்...