- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நாமக்கல்
- டிரக் உரிமையாளர்கள் சங்கம்
- தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் செயற்குழு
நாமக்கல்: டீசல் விலை மற்றும் சுங்கக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதன் காரணமாக தமிழகத்தில் லாரி வாடகை கட்டணங்களை உயர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் செயற்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
வரும் ஜூன் 15 முதல் தமிழகத்தில் லாரி வாடகை கட்டணங்களை 25% வரை உயர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், லாரி தொழிலின் ஒட்டுமொத்த செலவில் சுமார் 70% டீசலுக்கே செலவாகிறது என்று குறிப்பிட்டனர். சமீபத்திய எரிபொருள் விலை உயர்வால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்து உள்ளனர்.
இது தவிர சுங்க சாவடி கட்டணங்கள் மற்றும் உதிரி பாகங்கள் (Spare parts), டயர் விலைகள் என பல்வேறு விலைஉயர்வை தாங்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதால், லாரி வாடகை கட்டணங்களை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகி, கட்டண உயர்வுக்கு வழிவகுத்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். தொடர்ச்சியான செலவினங்களால் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே இந்த விலை உயர்வு என்றும் குறிப்பிட்டு உள்ளனர். லாரி வாடகை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
