மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஞானபுரீஸ்வரர் கோயிலில் பட்டின பிரவேச நிகழ்ச்சி நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 10ம் நாளான நேற்று முன்தினம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு ஞானசம்பந்தரின் குருபூஜை நாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஞானபுரீஸ்வரர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமி வழிபாடு செய்ததுடன் தருமபுரம் மேலவீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு வெள்ளி நாற்காலி பல்லக்கில் ஊர்வலமாக சென்றார். தொடர்ந்து வன துர்க்கை அம்மன் கோயிலில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு நடத்தினார். பின்னர் கோயிலில் தீர்த்தவாரி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்றிரவு பட்டின பிரவேச நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி இரவு 10 மணிக்கு திரு ஆபாரணங்கள் அணிந்து கொண்டு திருக்கூட்ட அடியவர்கள் திரள சிவிகை பல்லக்கில் தருமபுர ஆதீனம் எழுந்தருளினார். இதையடுத்து பல்லக்கை பக்தர்கள் சுமந்தபடி 4 வீதிகளில் வரும் பட்டின பிரவேச நிகழ்ச்சி நடந்தது. பூர்ணகும்ப மரியாதையுடன் பக்தர்கள் குருமகா சன்னிதானத்துக்கு வரவேற்பு அளித்தனர். இன்று காலை 27வது குருமகா சந்நிதானம் ஞானகொலு காட்சியில் எழுந்தருளினார். திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமி பாவான அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து குருமகா சந்நிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
