செய்யாறு: செய்யாறு அருகே, நெல் கொள்முதல் பாக்கி ரூ.100 கோடியை விரைந்து வழங்கக்கோரி, விவசாயிகள் இன்று தாலிக்கயிறுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகாவில் கடந்த 3 மாதமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சுற்றுப்புற விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்கின்றனர். இவற்றில் 3 மையங்கள் மட்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் செயல்பட்டு வருகிறது. அதில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 1 வாரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
ஆனால் மற்ற மையங்களில் தனியார் (என்சிசிஎப்) அமைப்பு சார்பில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை ரூ.100 கோடி வரை, சுமார் 3 மாதமாகியும் விவசாயிகளுக்கு வழங்கவில்லையாம். இந்த பணத்தை வழங்குமாறு கடந்த 1ம்தேதி வெம்பாக்கம் தாலுகா அலுவலகம் எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தூசி இன்ஸ்பெக்டர் கோபால், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர், வரும் 8ம்தேதிக்குள் (இன்று) பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு பணம் வரவில்லையாம்.
சுமார் 1 வாரமாக நெல் கொள்முதல் நிலையத்திற்கு டிராக்டர்களில் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளையும் எடைபோடவில்லையாம். இதனால் டிராக்டரிலேயே நெல் மூட்ைடகள் உள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை சுமார் 7.45 மணியளவில் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை மாங்கால் கூட்ரோடு மாமண்டூர் சந்தைமேட்டில் தாலிக்கயிறுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, நெல்மூட்டைகளுடன் டிராக்டர்களை சாலையில் நிறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘விவசாயிகளான நாங்கள், எங்கள் மனைவிகளின் தாலியை அடகு வைத்து விவசாயம் செய்துள்ளோம்.
ஆனால் எங்களிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு இதுவரை பணம் வழங்கவில்லை. இதனால் அடகு வைத்த தாலியை மீட்க முடியவில்லை. கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை 3 மாதமாகியும் என்சிசிஎப் தரவில்லை. இனிமேல் இந்த அமைப்பினர் மாவட்டத்தில் எங்கேயும் நெல் கொள்முதல் செய்யக்கூடாது. எங்களுக்கு உடனே நெல்லுக்கான பணத்தை தரவேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். அப்போது, இதுதொடர்பாக செய்யாறு சப்-கலெக்டர், மாவட்ட நிர்வாகத்திடம் கூறி, பணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவம் காரணமாக சிப்காட்டிற்கு தொழிலாளர்களை ஏற்றி வந்த பஸ்கள், பொதுமக்களின் வாகனங்கள், பள்ளி வாகனங்கள் என சுமார் 3 கிலோ மீட்டர் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றது. இதனால் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
