தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு; ஆதவ் அர்ஜூனா உறவினர் ரூ.258 கோடி போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கு தூசி தட்டி எடுப்பு: அமலாக்க இயக்குநரகம் மீண்டும் விசாரணையைத் தொடங்கியது

 

சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உறவினர் ரூ.258 கோடி போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், மீண்டும் விசாரணையை அமலாக்க இயக்குநரகம் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பணமோசடி விசாரணை தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டம், 2002-ன் கீழ், அமலாக்க இயக்குநரகத்தின் சென்னை மண்டல அலுவலகம், சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள ஐந்து இடங்களில் 26.05.2026 அன்று சோதனைகளை நடத்தியது. இந்தச் சோதனைகளின் விளைவாக, பணமோசடிக் குற்றத்துடன் தொடர்புடைய முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

என்டிபிஎஸ் சட்டம், 1985ன் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றங்களுக்காக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தாக்கல் செய்த இரண்டு புகார்களின் அடிப்படையில் அமலாக்க இயக்குநரகம் இவ்வழக்கில் விசாரணையைத் தொடங்கியது. முதல் வழக்கில், மார்ச் 5, 2024 செவ்வாய்க்கிழமை அதிகாலையில், மன்னார் வளைகுடா பகுதியில் சென்னை மண்டல அதிகாரிகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் இணைந்து நடத்திய சோதனையில், இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 99 கிலோ ஹஷிஷ் (இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 108 கோடி) ஒரு நாட்டுப் படகிலிருந்து கைப்பற்றப்பட்டது.

இரண்டாவது வழக்கில், மதுரையைச் சேர்ந்த ஃபிலோமென் பிரகாஷ் என்பவர், தனது கூட்டாளிகளுக்கு விநியோகிப்பதற்காகச் சென்னையிலிருந்து மதுரைக்கு மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப்பொருளைக் கொண்டு சென்றபோது, மதுரை ரயில் நிலையத்தில் டிஆர்ஐ அதிகாரிகளால் 37.645 கிலோ மெத்தாம்பேட்டமைன் (இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 150 கோடி) கைப்பற்றப்பட்டது. விசாரணையின் போது, இவ்விரு சம்பவங்களிலும் போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்டவர் ஜான் பிரிட்டோ என்பது தெரியவந்தது. அவர் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை வாங்கி, கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்றுள்ளார்.

இதற்கு ரெமிஸ்டன், ரமேஷ், ஜான்சன் மற்றும் பிரதாப் ஆகிய மீனவர்கள் அல்லது படகு உரிமையாளர்களின் உதவியை நாடினார். ஜான் பிரிட்டோவின் அறிவுறுத்தலின் பேரில் போதைப்பொருட்களைக் கடத்தி விநியோகித்ததற்காக இவர்களுக்குக் கமிஷன் வழங்கப்பட்டது. தனது செயல்பாடுகளுக்காக, கடத்துபவர்கள், தனது உறவினர் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளுக்கு ஊதியம் வழங்க ஜான் பிரிட்டோ ஹவாலா வழிமுறைகளைப் பயன்படுத்தினார். இச்செயல்பாடுகள் மூலம் அவரும் அவரது கூட்டாளிகளும் குற்றத்தின் மூலம் வருவாயை ஈட்டினர். மேலும், ஜான் பிரிட்டோ தலைமறைவாக இருப்பதும், வெளிநாட்டிலிருந்து தனது கடத்தல் கும்பலைத் தொலைதூரத்திலிருந்து இயக்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதில் ஜான் பிரிட்டோ என்பவர், தற்போது நெடுஞ்சாலைகள், பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் மாமியாரும் அதிமுக எம்எல்ஏவுமான லீமா ரோஸ் என்பவரின் சகோதரர் என்று தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ள அமலாக்கத்துறையினர் மீண்டும் வழக்கை தீவிரப்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Related Stories: