பிலிகுண்டுலு: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு வந்தடைந்தது. கனமழை காரணமாக, கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியுள்ளது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று பிற்பகலில் கொள்ளேகால் வந்தடைந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் பிலிகுண்டுலுவுக்கு வந்தடைந்தது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு, தமிழக எல்லையை வந்தடைந்த உபரிநீரின் அளவு ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
இதனால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த உபரிநீர், ஒகேனக்கல் வழியாக இன்று மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 68 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. குடிநீருக்காக விநாடிக்கு 1500 கனஅடி திறந்து விடப்பட்டது. நீர்மட்டம் 73.18 அடியாகவும், நீர்இருப்பு 35.49 டிஎம்சியாகவும் இருந்தது.
