அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் பொதுப்பிரிவு மாணவருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்

சென்னை: நடப்பாண்டு அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. 2026-27ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 (ஷிப்ட் I – 101022 / ஷிப்ட்-II – 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன.இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டு இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 7ம் தேதி தொடங்கியது.

விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வந்தனர். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தனைத்தொடர்ந்து தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் பொது பிரிவினைருக்கான கலந்தாய்வு அந்தந்த கல்லூரிகள் நேரடியாக இன்று முதல் (ஜூன் 8) தொடங்குகிறது. தொடர் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை ஜூன் 18ம் தேதி வரையிலும் நடைபெறும். 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 15ம் தேதியும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதியும் வகுப்புகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: