தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்; ஒட்டுமொத்த வழக்கு விசாரணைக்கும் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: குதிரை பேர வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் ஒட்டுமொத்த விசாரணைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. குதிரை பேரம் நடத்தியதாக ஊத்தங்கரை தவெக எம் எல் ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரமேஷ், கார்த்திக் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என கூறி விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ரமேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் மனுதாரர் ரமேஷுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்தநிலையில் வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன்,விராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, ஒட்டுமொத்த வழக்கு விசாரணைக்கும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மற்ற வழக்குகளோடு சேர்த்து ஒத்திவைத்தனர். இனி இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்படும்.

Related Stories: