ஏதாவது ஆனால், நாங்கள் பொறுப்பல்ல… தோத்து போயிட்டோமே தவிர செத்துப் போகல…: விஜய்க்கு உதயகுமார் எச்சரிக்கை

மதுரை: நாங்க தோத்துதான் போயிட்டோமே தவிர, செத்துப் போகலை. உங்களை தேடி வருபவர்களால் என்ன நடக்குமென தெரியாது என முதல்வர் விஜய்க்கு, முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தலைமை மீது மனத்தாங்கல் ஏற்பட்டு சிலர் எதிரியிடம் சரணாகதி அடைந்து வருகிறார்கள். நெடுஞ்செழியன், எஸ்டிஎஸ் உள்ளிட்ட சில தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது தலைமை மீது மனத்தாங்கல் ஏற்பட்டு சென்று, மீண்டும் தாய்கழகத்தில் இணைந்த வரலாறு உண்டு. முன்னாள் அமைச்சர்கள் கருத்து வேறுபாட்டால் சென்றுள்ளனர். தெளிவு கிடைக்கும் போது மீண்டும் தாய் கழகத்திற்கு வருவார்கள். மாஜி அமைச்சர்கள் தவெகவில் சேர்ந்த காட்சியை பார்த்து சில சில்லரை பசங்க சிரிப்பா சிரிக்கிறது வேதனையளிக்கிறது. நாங்க தோத்து தான் போயிட்டோம், தவிர செத்துப் போகல.

விஜய் தம்பி, அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னால் கூவி அழைத்தீர்கள். ஒரு காக்கா, குருவி லெட்டர் பேடு கட்சி கூட உங்களை நம்பி வரவில்லை. இன்றைக்கு அதிகாரத்தை தேடி வருகிறார்கள். உங்களை தேடி ஓடி வருகிறவர்களை வைத்துக்கொண்டு உங்களுக்கு என்ன நடக்குமோ எங்களுக்கு தெரியாது. உங்களுக்கு ஏதாவது ஒன்று ஆனால் அதற்கு அதிமுகவும், நாங்களும் பொறுப்பல்ல. உங்களை தேடி ஓடி வருபவர்களுக்கும் 10 மாதம்தான், எங்களுக்கும் 10 மாதம்தான். எங்களுக்கும் ஒருமுறைதான் இறப்பு விஜய் தம்பி. உங்களுக்கு எச்சரிக்கையாகச் சொல்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

‘‘விஜய்க்கு ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பு இல்லை என்று கூறினீர்களே? அப்படி என்ன நடந்து விடப்போகிறது’’ என்ற கேள்விக்கு, ‘‘ஒரு எச்சரிக்கையாகத்தான் நான் இதைச் சொல்கிறேன்’’ என்றவரிடம், ‘‘விஜய் கடும் விளைவுகளை சந்திப்பார் என்றும் சொல்கிறீர்களே, அது என்ன விளைவு?’’ என்றும் கேட்டதற்கு, ‘‘பொறுத்திருந்து பாருங்கள் தெரியும்’’ என்று உதயகுமார் தெரிவித்தார்.

‘ஆதவ் அர்ஜூனா பைத்தியக்கார அமைச்சர்’
‘‘மற்றும் பலர் என்று கூறிய விஜய், 25 சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஏன் சால்வை போட்டார்? தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவா? ஆதவ் அர்ஜூனா என்ற பைத்தியக்கார அமைச்சர், 50 சதவீத அதிமுகவினரை பிடித்து விட்டதாக பேசுகிறார். தவெக ஆட்சிக்கு வரவேண்டுமென அதிமுகவினர் ஓட்டு போட்டதாகவும் கூறுகிறார். அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதா எனத்தெரியவில்லை. இது தொடர்ந்தால் விஜய் கடும் விளைவுகளை சந்திப்பார். இதுபோன்ற அரைவேக்காட்டு கிறுக்கு அமைச்சர்களை எல்லாம் அமைச்சரவையில் நாம் பார்க்க வேண்டும் என்பது தலைவிதி’’ என்று உதயகுமார் தெரிவித்தார்.

Related Stories: