சென்னை: கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில், புத்தெழுச்சி நாள் விழா பெரவள்ளூர் அகரம் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:
தமிழ்நாட்டை பொற்காலமாக மாற்றியது திராவிட மாடல் ஆட்சி தான். மு.க.ஸ்டாலின் செய்த நலத்திட்டங்களுக்கு பேரை மட்டும் மாற்றி, உங்களது பெயரில் ஸ்டிக்கர் மாற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் பெயரை மட்டும் மாற்றினால் உங்களுக்கு நல்ல பெயர் வரும். ஆனால் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை மாற்றினால் மக்களிடம் இருந்து எதிர்ப்பு தான் வரும். அனேகமாக கலைஞரின் 104வது பிறந்த நாளில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பார்.
கொளத்தூரில் தலைவர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவர் தோல்வியடைந்தது கஷ்டமாக இருக்கிறது. எப்பேர்பட்ட தலைவரை தோற்கடித்து இருக்கிறீர்கள். பட்டால் தான் மக்களுக்கு புத்தி வரும் என கண்கலங்கி பேசினார்.
