பெங்களூரு: முதல்வராக டி.கே. சிவகுமார் பதவி ஏற்ற 48 மணி நேரத்தில் அவரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ராமலிங்க ரெட்டி பதவியை ராஜினாமா செய்த நிலையில், மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜேவாலா, பி.கே. ஹரிபிரசாத் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ராஜினாமாவை வாபஸ் பெற்றதாக ராமலிங்கரெட்டி தெரிவித்துள்ளார்.
முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில் மூத்த எம்எல்ஏ ராமலிங்கரெட்டிக்கு நீர்ப்பாசன துறை ஒதுக்கப்பட்டது. பெங்களூரு வளர்ச்சி துறை தரவேண்டும் என பிடிவாதம் பிடித்த அவர் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா அமைச்சர் ராமலிங்கரெட்டிக்கு அழைத்து பேசினர். இதைத்தொடர்ந்து முதல்வர் டி.கே. சிவகுமாரும் ராமலிங்க ரெட்டியை சந்தித்து சமரச பேச்சு நடத்தினார்.
இது குறித்து ராமலிங்க ரெட்டி கூறியிருப்பதாவது:
இதற்கு முன்பு எனக்கு இந்த துறை வேண்டும் என பிடிவாதம் பிடிக்கவில்லை. சித்தராமையா அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் போக்குவரத்து வழங்கப்பட்டது. அதை ஏற்று சிறப்பாக பணியாற்றினேன். அதே நேரம் எனது மனதில் இருந்ததை முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் தெரிவித்தேன். என்னை சந்தித்து பேசிய டி.கே. சிவகுமார் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறினார். அத்துடன் மேலிட தலைவர்களின் அறிவுரையை ஏற்று எந்த துறையை அளித்தாலும் ஏற்றுக்கொள்வேன். எனக்கு எந்த துறைகொடுத்தாலும் அதை திறமையாக நிர்வகிப்பேன். தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
