சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில், தேனிசை செல்லப்பாவின் புகழ் வணக்க நினைவேந்தல் கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது சீமான் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி திமுக போட்ட பிச்சையில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளார்கள். உண்மையில் மானம் இருந்தால் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவுடன் இடைத்தேர்தலை சந்தித்து வென்று வா பார்க்கலாம். திமுகவிடம் தட்டேந்தி ஒரு மாநிலங்களவை இடம், தவெகவிடம் தட்டேந்தி ஒரு மாநிலங்களவை இடம் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. ஜோதிமணி ஒரு கட்சியும், சிதம்பரம் ஒரு கட்சியும் வைத்துள்ளார்கள். வாக்குச்சாவடி முகவர் போடுவதற்கு உங்களிடம் ஆள் உள்ளதா?. தனியாக நின்று நீங்கள் டெபாசிட் வாங்குவீர்களா?, நான் தோற்றாலும் 4 சதவீதம் வாக்கு வைத்துள்ளேன். நீங்கள் வென்றால் கூட அவ்வளவு வாக்கு வராது.
விஜய் ஊடகத்தை மதிப்பதே இல்லை. ஆனால், ஊடகங்கள் அவர் என்ன செய்தாலும் செய்தியாக்குகிறார்கள். எப்படிப்பட்ட அறிவாளிகளிடம் சிக்கியுள்ளோம். போக்குவரத்துத் துறைக்கு ஒரு அமைச்சர் உள்ளார். அவருக்கு அரசு வால்வோ பேருந்து ஓட்டுவது கூட தெரியவில்லை. பயணிகள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், அர்த்தமற்ற முறையில் பேசியுள்ளார். முன்பதிவு செய்தவர்களை இறக்கி விட்டுவிட்டு, காத்திருந்தவர்களை ஏற்றிவிட்டுள்ளார்.
தேர்தலின்போது பாட்டிலுக்குப் 10 ரூபாய் எனப் பாடிவிட்டு, இப்போது உடனே அதை நிறுத்த முடியாது என அமைச்சர் கூறுகிறார். கட்சத்தீவு குறித்துக் கேட்டால் மீன்வளத்துறை அமைச்சர் பதில் இல்லை என்கிறார். தூத்துக்குடியை துறைமுக நகராக மாற்றுவேன் என்கிறார். அது ஏற்கனவே துறைமுக நகரம்தான். 75 நிமிடத்தில் 436 திட்டங்களை ஆலோசித்துள்ளார்கள். கவர்ச்சியால் வென்று விட்டார்கள் என்று சொன்னால் கோபப்படுகிறார். சி.எம் சார் உங்களை மக்கள் தேர்வு செய்ததற்கு ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள். தமிழகத்தில் அரசியல் பேரிடர் நடந்துள்ளது. மக்கள் அனுபவிக்க வேண்டியதுதான்.
