மின்கசிவால் சிலிண்டர் வெடித்து பாட்டி, பேரன், பேத்தி பலி: வீடும் இடிந்து விழுந்தது

 

 

திருமலை: மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்தது. இதில் பாட்டி, பேரன், பேத்தி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கால்வாடாவைச் சேர்ந்தவர் சைது. இவரது மனைவி சந்திரகலா. இவர்களது மகள் தனம்மா. இவருக்கு திருமணமாகி லட்சுமணன்(16) என்ற மகனும், பிரணதி(14) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் தனம்மாவின் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனம்மா, தனது மகன், மகளுடன் தாய் சந்திரகலா வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையில் சைதுவும் ஒரு மாதத்திற்கு முன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இந்நிலையில் கட்டிட தொழிலாளியான தனம்மா, மகன், மகளை தாய் சந்திரகலாவிடம் விட்டுவிட்டு, 2 நாட்களுக்கு முன்பு கட்டுமான பணிக்காக புனேவுக்கு சென்றார். இந்நிலையில் ேநற்றிரவு சந்திரகலா, பேரன், பேத்தியுடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் திடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். அப்போது வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் வீடும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிய சந்திரகலா, லட்சுமணன், பிரணதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணி மேற்கொண்டனர். பின்னர் 3 பேரின் சடலங்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: