டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும்.
அதன் படி, மூன்று நாள் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறித்து இன்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.25%மாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று ஆர்.பி.ஐ. அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற பிறகு, ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற நாணயக் கொள்கைக் குழுவின் முடிவுகளை சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டுள்ளார். இதன்படி ரெப்போ ரேட் விகிதம் மாற்றமின்றி 5.25% ஆகவே தொடர்கிறது. கடந்த நிதியாண்டில் (2025-26) ரெப்போ வட்டி விகிதத்தில் 125 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில், இம்முறை ரெப்போ விகிதம் நிலையாகவே இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
