7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆணையராக இருந்தவருக்கு டம்மி பதவி: மதுரை போலீஸ் கமிஷனராக கபில்குமார் சி.சரத்கர் நியமனம்

சென்னை: தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகர தலைமையிடம் மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த கபில் குமார் சி.சரத்கர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனராகவும், மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அபிஷேக் தீட்சித் ரயில்வே ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி லோகநாதன் தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும்,

முன்னாள் முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக இருந்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருநாவுக்காரசு திருநெல்வேலி சரக டிஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி பகலவன் சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து இணை கமிஷனராகவும், சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த திஷா மிட்டல் சென்னை மாநகர மேற்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும், சென்னை மாநகர கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக இருந்த பண்டி கங்காதர் தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின்போது மதுரை கமிஷனராக இருந்த லோகநாதன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் உத்தரவுப்படி செயல்பட்டவர். இதனால், நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானார். தேர்தல் நேரத்தில் அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது 25 நாட்களுக்கும் மேலாக அவருக்கு பதவி வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது அவர் தொழில்நுட்பப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேர்மையான அதிகாரியான லோகநாதன், திருப்பரங்குன்றம் விவகார நேரத்தில் இருந்ததால் தற்போது அவர் டம்மியான பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு போலீஸ் அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறும் விஜய் தலைமையிலான தவெக அரசு, லோகநாதனை டம்மியான பதவியில் நியமித்திருப்பது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: