டெல்லி: உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பூமியைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 1972 இல் ஐக்கிய நாடுகள் சபையால் இது தொடங்கப்பட்டது
அந்த வகையில் இன்று அனுசரிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகளை பற்றி குறிப்பிட்டு உள்ளதோடு, பசுமைப் பரப்பை அதிகரித்தல் மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான உறுதிமொழியை நாட்டு மக்கள் எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உலக சுற்றுச்சூழல் தினத்தில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அனைவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் நாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளும் நாள் இதுவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த பத்தாண்டுகளில் நமது அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள், சுற்றுச்சூழலை மேம்படுத்த நாம் செய்து வரும் பணிகளைப் பறைசாற்றுகின்றன. பசுமைப் பரப்பை விரிவுபடுத்தியது முதல் பல்வேறு விலங்கினங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது வரை பல விஷயங்கள் இந்தியாவின் முக்கிய வெற்றிகளில் அடங்கும். கூட்டு முயற்சிகள், கொள்கைகள், அறிவியல் மற்றும் புத்தாக்கத்தின் மீதான நம்பிக்கை ஆகியவை எவ்வாறு நமது சுற்றுச்சூழலை மேம்படுத்த முடியும் என்பதை நம் நாட்டு மக்கள் நிரூபித்துள்ளனர் என்றும், நமது பன்முகச் சூழல் அமைப்புகள் எண்ணற்ற உயிரினங்களுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் ஆதரவளிக்கின்றன எனவும் கூறி உள்ளார்.
